இளம் தொழிலதிபர் படுகொலையில் வெளிவரும் முக்கிய பின்னணி: கொலைக்கான காரணம் இதுவா?

678

அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்ட இளம் தொழிலதிபர் சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுவந்த நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நியூயார்க்கின் மான்ஹாட்டனில் வசித்து வந்த 33 வயது ஃபஹிம் சாலே, சமீபத்தில் நைஜீரியாவில் இயங்கிவரும் கோகாடா என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.

இந்நிறுவனம் மோட்டார் சைக்கிள்களுடன் போக்குவரத்து முறையை பொதுமக்களுக்கு வழங்குகிறது.

இந்த நிலையில் சாலே கொல்லப்பட, ஒப்பந்தக் கொலையாளியை வேலைக்கு அமர்த்தி அல்லது இந்த கொலையில் ஈடுபட்ட ஒருவருடனான நிதி தகராறின் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.


முன்னெடுக்கப்பட்டிருக்கும் விசாரணையில் நைஜீரிய அதிகாரிகள் ஈடுபடவில்லை எனவும், ஆனால் தங்கள் நாட்டில் சாலேவின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை வழங்க தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையிலேயே கோகாடா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான Deji Oduntan என்பவருக்கும் சாலேவுக்குமான உறவை தீவிரமாக விசாரிக்க விசாரணை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2017 ஆம் ஆண்டு கோகாடா நிறுவனம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் பல நெருக்கடிகளை எதிர்கொண்ட கோகாடா நிறுவனம் 2018 கோடையில் தங்களது ஊழியர்களில் 70 சதவீத பேரை வேலையை விட்டு நீக்கியது. இந்த விவகாரம் தொடர்பில் ஒரு முன்னாள் ஊழியர் தெரிவிக்கையில், ஒடுன்டனும் சாலேவும் நிறுவனத்தை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி அடிக்கடி வாதிட்டதாகக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மார்ச் 2019 இல் ஒடுன்டன் நிறுவனத்தை விட்டு வெளியேறினார், சாலே முழு நேர தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். மட்டுமின்றி அடுத்த இரண்டு மாதத்தில் Ayodeji Adewunmi என்ற இளைஞரை தமக்கு உதவும் வகையில் இணை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தார். இதனிடையே, உள்ளூர் பத்திரிகை ஒன்று தவறான நிர்வாக குற்றச்சாட்டுகளும் முன்வைத்தது.

நிதி தொடர்பான நெருக்கடியை சாலே சமாளித்தாலும் கோகாடா நிறுவனம் கடுமையான சிக்கலையே எதிர்கொண்டது. இந்த நிலையில் எவ்வித அறிவிப்பும் இன்றி இணை தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்ட Adewunmi நிறுவனத்தைவிட்டு வெளியேறினார்.

ஆனால் தாம் 70 சதவீத ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது மிகப்பெரிய தவறு என சாலே ஒப்புக்கொண்டுள்ளார். சாலேவுக்கு எதிரான நகர்வுகள் நைஜீரியாவில் இருந்து முன்னெடுக்கப்பட்டனவா என்ற சந்தேகம் தற்போது விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.