இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் பழகி காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண், கர்ப்பமடைந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரது கணவரையும், குடும்பத்தினரையும் விசாரித்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், மைசூருவில் இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தவர் மஞ்சுளா(23). இவருக்கு பெல்காம் மாவட்டம் மச்சே கிராமத்தைச் சேர்ந்த போரேஷ் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானார்.
இதையடுத்து இவர்களது நட்பு, காதலாக வளர்ந்து, அவ்வப்போது சந்தித்தும் வந்தனர். இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு போரேஷைத் தேடி மைசூரில் இருந்து பெல்காமிற்கு சென்ற மஞ்சுளா, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி போரேஷை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், திடீரென மஞ்சுளா மர்மான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் கர்ப்பமாக இருந்ததால் மஞ்சுளாவின் கணவர் போரேஷும், அவரது குடும்பத்தினரும் கொலை செய்ததாக மஞ்சுளாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த தங்கள் மகளை அவரது கணவர் போரேஷ் மற்றும் குடும்பத்தினர் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினார். ஆனால், கருவைக் கலைக்கமாட்டேன் என்று மஞ்சுளா கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்நிலையில் மஞ்சுளாவை இன்று கொலை செய்து விட்டு கணவர் பிரேஷும், அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி விட்டதாக மஞ்சுளாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பெல்காம் ஊரக காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை, கொலைப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தை காவல் துறை டிசிபி ரோகன் ஜெகதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மூன்று மாத கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.