காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மனைவி கொலை.. சிக்கிய கணவர், மாமனார், மாமியார்!!

413

மதுரையில்..

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சதீஷ்குமார்- (31), தேனி மாவட்டம் கடமலைகுண்டைச் சேர்ந்த ரம்யா (25) ஆகியே இருவரும் திருப்பரங்குன்றம் அருகே ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்தனர்.

அங்கு இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு பின்னர் காதலிக்கத் தொடங்கினர். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சதீஷ்குமார் – ரம்யா திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள், விளாச்சேரி முனியாண்டிபுரம் குறிஞ்சி நகர் 2-வது தெருவில் வசித்து வந்தனர்.

இதையடுத்து ரம்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமாருக்கும், ரம்யாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல் நேற்று முன்தினமும் சதீஷ்குமார், ரம்யாவுக்கு இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.


அப்போது ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், வீட்டில் இருந்த கட்டையை எடுத்து ரம்யாவை தாக்கியுள்ளதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த ரம்யா சரிந்துவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் இந்த கொலை ரம்யாவின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் அங்கு சென்றனர். மேலும் அவர்கள் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த திருப்பரங்குன்றம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றிரவு ரம்யாவின் மாமனார், மாமியாரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை அரசு மருத்துவமனையில் ரம்யாவின் உடலை அவரது பெற்றோர் வாங்க மறுத்தனர்.

இதையடுத்து சதீஷ்குமார் (31), சதீஷ்குமாரின் தந்தை செல்வம் (55), தாயார் பஞ்சவர்ணம் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.