சரிந்து விழுந்து 5 வயது சிறுமி மரணம்… ரெண்டு மாசத்துல 12க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மாரடைப்பால் பலியான சோகம்!!

382

உத்தரப் பிரதேசத்தில்..

கடந்த இரண்டு மாதங்களில், 12க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் மாரடைப்பால் பலியான சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்துகின்றன. இத்தனைக்கும் அனைவருமே 15 வயதுக்குட்பட்டவர்கள். எந்தவிதமான தீய பழக்கங்களும் இல்லாத, ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தவர்கள்.

ஐந்து வயது சிறுமி, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், செல்போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் காமினி(5). நேற்று முன் தினம் தனது தாயாரின் அருகில், படுத்தபடியே செல்போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த காமினியின் கைகளில் இருந்து திடீரென செல்போன் கீழே விழுந்ததால் சத்தம் கேட்டு எழுந்து பார்த்த காமினியின் தாயார் அதிர்ச்சியடைந்தார். எவ்வித அசைவுமின்றி காமினி படுத்திருப்பதை கண்டு அலறியடித்தப்படியே காமினியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.


காமினியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சிறுமியின் மரணத்திற்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதே பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 12-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மாரடைப்பு காரணமாக அம்ரோஹா மற்றும் பிஜுனார் மாவட்டங்களில் திடீரென உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடும் குளிர் காரணமாக ஆக்சிஜன் அளவுகள் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை குறைவதால் இது போன்ற மாரடைப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அடுத்தடுத்து சிறுவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து வரும் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக வடமாநிலங்களில் கடும் குளிரும், பனிமூட்டமும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.