நான்கு ஆண்டுகளில் சொந்த பிள்ளைகள் ஐவரை படுகொலை செய்த தந்தை: வெளியான பகீர் வாக்குமூலம்!!

822

இந்திய மாநிலம் அரியானாவில் தந்தை ஒருவர் கடந்த 4 வருடங்களில் தனது 5 குழந்தைகளை படுகொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள சஃபிதான் கிராமத்தில் வசித்து வருபவர் கூலி தொழிலாளியான ஜும்மா. இவரது மனைவி தற்போது 6-வது முறை கர்ப்பமாக இருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 20 ஆம் திகதி இவரது இரண்டு, 11 மற்றும் 7 வயது மகள்கள் குடியிருப்பின் அருகாமையில் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தமது மகள்கள் இருவரும் காணாமல் போயுள்ளனர் என பொலிசாரிடம் ஜும்மா புகார் அளித்த 5-வது நாளில் பிள்ளைகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஜும்மா முரணான தகவல்களை பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், பிள்ளைகள் மரணமடைந்த நிலையில், உளவியல் குழப்பமாக இருக்கலாம் என அவரை விசாரணைக்கு பின்னர் விடுவித்துள்ளனர்.


இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் கிராம பஞ்சாயத்தார் ஒரு குழுவமைத்து தனிப்பட்ட முறையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் ஜும்மா அளித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக பஞ்சாயத்தார் ஜும்மாவை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிசாரிடம் ஜும்மா தமது குழந்தைகள் ஐவரை தாமே கொலை செய்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமது மகள்கள் இருவருக்கும் அளவுக்கு அதிகமான போதை மருந்து அளித்து, பின்னர் கால்வாயில் வீசியதாக பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இச்சம்பவம் நடைபெறும் போது, கர்ப்பிணியான தமது மனைவிக்கும் அளவுக்கு அதிகமான போதை மருந்து அளித்ததாகவும் ஜும்மா தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, தனது மற்றொரு மகன் மற்றும் மகளையும் அவர் கொலை செய்துள்ளார். வறுமையால் இந்த கொலைகளை செய்தேன் என அவர் கூறியுள்ளார்.

ஆனால் மந்திரவாதி ஒருவர் கூறியதன்பேரிலேயே இந்த கொலைகளை செய்ததாக ஜும்மா பஞ்சாயத்தில் கூறியுள்ளார். பொலிசாரிடம் இது தொடர்பில் அவர் ஏதும் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. தற்போது உளவியல் ஆலோசகர்களின் உதவியுடன் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள பொலிசார் முடிவு செய்துள்ளனர்.