பழம்பெரும் நடிகை உஷா ராணி மரணம்!

814

சென்னை அயப்பாக்கத்தில் வசித்த இவருக்கு சில தினங்களுக்கு முன்பு சிறு நீரக பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.

உஷா ராணி குழந்தை நட்சத்திரமாக 12 வயதிலேயே நடிக்க தொடங்கினார். எம்.ஜி.ஆருடன் பட்டிகாட்டு பொன்னையா, சிவாஜியின் என்னைப்போல் ஒருவன், கமல்ஹாசன் ஜோடியாக குமாஸ்தாவின் மகள் மற்றும் ஜக்கம்மா உள்பட தமிழில் 50 படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் பிரேம் நசீர், மது, சுகுமார் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளார். மலையாளத்தில் மட்டும் 200 படங்களில் நடித்து இருக்கிறார், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.


மறைந்த உஷா ராணியின் கணவர் என். சங்கரன் நாயர் பிரபல மலையாள இயக்குனர் ஆவார். மலையாளத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த விஷணு விஜயம், பிரமிளா நடித்த தம்புராட்டி, பிரேம் நசீரின் ஒரு ஜென்மம் கூடி உள்பட 40 படங்களை இயக்கி உள்ளார். அவரை உஷா ராணி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சங்கரன் நாயர் 2005-ல் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவர்களுக்கு விஷ்ணு என்ற மகன் உள்ளார். உஷா ராணி மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.