பேஸ்புக் பக்கத்தில் மனைவியின் புகைப்படம்: 3 பிள்ளைகளை கொன்று தற்கொலை செய்த நபர்!

849

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் 3 பிள்ளைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்த சம்பவத்தில் குடும்ப தகராறு காரணமாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 35 வயதான கைலாஸ் பாமர் என்பவரே சனிக்கிழமை பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டவர்.

இவரின் மனைவி சுமார் ஒன்றரை மாதம் முன்னர் பிரிந்து சென்றுள்ளார். காய்கறி விற்பனை செய்து வரும் கைலாசுக்கு ஊரடங்கால் போதிய வருவாய் இல்லை என்பதாலையே மனைவி சண்டையிட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மன உளைச்சலில் கைலாஸ் இருந்து வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த நிலையில் மனைவி இன்னொருவருடன் இருக்கும் புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில் கைலாஸ் காண நேர்ந்துள்ளது.

இதனையடுத்தே சொந்த பிள்ளைகளை கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

சனிக்கிழமை சுமார் 4 மணியளவில் கைலாஸ் தங்கியிருந்த வாடகை குடியிருப்பில் அவரது தந்தை வந்து விசாரித்துள்ளார்.

பின்னர் இரவு 8 மணிக்கு மீண்டும் மகனின் குடியிருப்புக்கு சென்றுள்ளார் அந்த தந்தை. ஆனால் குடியிருப்பு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.

சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து, வாசலை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அங்கே கைலாஸ் மற்றும் மூன்று பிள்ளைகள் கழுத்தறுபட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட சோதனையில், கொலை மற்றும் தற்கொலைக்கு பயன்படுத்திய கத்தியை மீட்டுள்ளனர்.