ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விட்ட 8ம் வகுப்பு பள்ளி மாணவன்!!

942

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த்தின் வீடு அமைந்துள்ளது. இவரது வீட்டுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. எனினும், இந்த செயலில் ஈடுபட்ட நபர் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த விசாரணையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் வசிக்கும் 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ஒருவன் மிரட்டல் விடுத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பள்ளி மாணவன் மற்றும் அவனது தாயாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவனது தாய் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தான் கேட்டது கிடைக்காவிட்டால் செல்போனை வைத்து கொண்டு இதுபோல் மிரட்டல் விடுப்பதை மாணவன் வாடிக்கையாக வைத்துள்ளதும் தெரிய வந்தது.


அவனது செல்போனில் இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் கால்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. எனினும், 108 எண்ணுக்கு அழைத்து மிரட்டல் விடுத்தது விசாரணையில் உறுதியானது.

இதனை தொடர்ந்து, பள்ளி மாணவனுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.