விவகாரத்து செய்த மனைவியுடன் கட்டாயத்திருமணம்.. வாலிபர் எடுத்த சோக முடிவு..!

993

சென்னை மதுரவாயல், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ். இவர் பாடியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வந்தார்.

இவருக்கும் சத்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

இதையடுத்து பிரித்திவிராஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில், முதல் மனைவி சத்யாவின் சகோதரர்களான தாமு, இளையராஜா ஆகிய 2 பேரும் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து பிரித்திவிராஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமல்லபுரம் தூக்கிச்சென்று அங்குள்ள ஒரு வீட்டில் தங்க வைத்து, தனது தங்கையை மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என அவரை அடித்து உதைத்தனர்.


மேலும், விவாகரத்து பெற்ற முதல் மனைவி சத்யாவுடன் அவருக்கு மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாத பிரித்திவிராஜ் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பி வீட்டிற்கு வந்த பிரித்திவிராஜ், நேற்று முன்தினம் காலை தனது வீட்டின் வாசலில் நின்றபடி திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பிரித்திவிராஜிடம் மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.

அவரது உடலில் தீக்காயம் அதிகளவிலிருந்ததால் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் அவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் மாஜிஸ்திரேட் முன்பு மரண வாக்குமூலமாக அளித்தார்.

இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பிரித்திவிராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது மனைவி சத்யா, அவரது சகோதரர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் எனச் சிலரைத் தேடி வருகின்றனர்.

விவாகரத்து பெற்ற முதல் மனைவியுடன் மீண்டும் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.