இரு குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம் : குடும்பத்தையே புரட்டிப் போட்ட சம்பவம்!!

594

தஞ்சை…..

தந்தையுடன் குளத்திற்குக் குளிக்கச் சென்ற சகோதரிகள் இரண்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் தேனி வல்லம் புதூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வல்லம் காவல் நிலைய போலீசார் அளித்த தகவலின்படி, தஞ்சை மாவட்டம் வல்லம் புதூர் கிராமம் மகாகாளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர்கள் புண்ணியமூர்த்தி கோமதி தம்பதியினர்.

புண்ணியமூர்த்தி புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 8 வயதான பெரியநாயகி மற்றும் 6 வயதான பிரிதிஷா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் பெரியநாயகி வல்லம் புதூரில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பும் பிரதிஷா முதல் வகுப்பும் படித்து வந்தனர்.

கடந்த ஒரு வருடமாக புண்ணியமூர்த்தி தனது குடும்பத்துடன் தன் மனைவியின் சொந்த ஊரான தஞ்சை அருகே உள்ள வல்லம் புதூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பணி முடிந்து கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்த புண்ணியமூர்த்தி தனது குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு குளிப்பதற்காக வல்லம் புதூரில் இருந்து நாட்டாணி செல்லும் சாலையில் உள்ள புதுக்குளத்திற்குச் சென்றுள்ளார்.


அப்போது குழந்தைகளைக் குளத்தின் கரையில் உட்கார வைத்துவிட்டு இயற்கை உபாதையைக் கழிக்க அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தைகள் இருவரையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தவர் அருகில் எங்கேனும் விளையாடிக் கொண்டு இருக்கிறார்களா எனத் தேடிப் பார்த்துள்ளார்.

நீண்ட நேரமாகத் தேடியும் குழந்தைகள் கிடைக்காததால் மீண்டும் குளக் கரைக்கு வந்து தேடியுள்ளார். பின்னர் அக்கம் பக்கம் உள்ளவர்களும் சேர்ந்து குழந்தைகளைத் தேடியுள்ளனர். குழந்தைகள் அணிந்து இருந்த காலணிகள் மற்றும் ஆடைகள் கரையிலிருந்தது கண்டு சந்தேகம் அடைந்த அவர் குளத்தில் தேடியுள்ளார்.

இவரின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் வந்து குளத்தில் இறங்கித் தேடியுள்ளனர். அப்போது குளத்தின் சேற்றில் சிக்கி குழந்தைகள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

துள்ளி விளையாடிய தங்கள் குழந்தைகள் இருவரின் உயிரற்ற உடலைப் பார்த்த புண்ணியமூர்த்தி துக்கம் தாங்காமல் கதறி அழுதார்.பின்னர் இது குறித்து தகவல் அறிந்த வல்லம் காவல் நிலைய காவல்துறை குழந்தைகள் இருவரின் உடலையும் மீட்டு உடல் கூறு ஆய்விற்காகத் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிக்கட்டிலிருந்த பள்ளத்தைக் கவனிக்காமல் குழந்தைகள் குளத்தில் இறங்கியதால் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிர் இழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

குழந்தைகளின் உடலைப் பார்த்த தாயும் உறவினர்களும் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளான குழந்தைகள் இரண்டு பேரும் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடைய்யே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.