உள்ளே நுழையாதீங்க.. தந்தைக்கு எச்சரிக்கை பலகை வைத்துவிட்டு தாயும், மகனும் தற்கொலை செய்த சோகம்!!

841

தருமபுரி..

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒட்டப்பட்டி பகுதியில் பழனிவேல், அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் விஜய் ஆனந்த் ஆகியோர் வசித்து வந்தனர். இதில் பழனிவேல் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆவார்.

பொறியியல் பட்டதாரியான விஜய் ஆனந்த், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து நூல் தொழில் செய்து வந்துள்ளார். ஆனால் தொழிலில் போதிய வருவாய் இல்லாததால், நண்பர்களிடம் முதலீடு செய்த பணத்தை விஜய் ஆனந்த் திருப்பி கேட்டுள்ளார்.

இதனையடுத்து கொடுத்த பணத்திற்கு மாதந்தோறும் வட்டி தருவதாக நண்பர்களான கார்த்திக், அருண் இருவரும் கூறினர். அதன்படி சில மாதங்கள் வட்டியை கொடுத்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர்களால் முறையாக வட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் நண்பர்கள் மூவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.


முதலீடு செய்த 25 லட்சம் பணம் வரவில்லை, குடும்ப வறுமை, நண்பர்கள் ஏமாற்றம் என விஜய் ஆனந்த் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், விஜய் ஆனந்தின் தந்தை பழனிவேல் அவருடைய சொந்த ஊரான புலிக்கரைக்கு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் வீட்டிலிருந்த விஜய் ஆனந்த் மற்றும் தாய் சாந்தி இருவரும் விபரீத முடிவு எடுத்தனர். வீட்டில் ஒரு அறையில் தங்களது முகத்தில் பாலித்தின் கவரை வைத்து மூடி, நைட்ரஜன் கேஸ் சிலிண்டரில் பைப் லைன் கனக்சன் மூலம் முகத்தை மூடிய பாலித்தின் கவருக்கும் நைட்ரஜனை பாய்ச்சி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் கதவை அப்படியே திறந்தால், திறப்பவருக்கும் நைட்ரஜன் வாயுவால் பாதிப்பு ஏற்படும் என்பதால் “POISON GAS, NITROJAN INSIDE, PLEASE CALL POLICE, BREAK WINDOWS BEFORE” என ஒரு சார்ட்டில் எழுதி ஒட்டிவைத்தனர்.

இதனை தொடர்ந்து மாலை வீடு திரும்பிய தந்தை பழனிவேல், இருவரின் நிலை மற்றும் சார்டில் எழுதி வைத்திருந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அங்கு விரைந்த போலீசார், தாய், மகன் ஆகிய இருவரின் உடலையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்துகொண்ட அறையில் இரண்டு சிலிண்டர்கள், நைட்ரஜன் வாங்கியதற்கான பெட்டிகள், அவற்றை சிலிண்டரோடு இணைப்பதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் புதிதாக வாங்கி வைத்துள்ளனர். மேலும் ஒரு பெட்டி திறக்காமல் இருந்துள்ளது. அந்த பெட்டியின் மீது METAL CUTTER, FOR SUCIED என எழுதப்பட்டிருந்தது.

அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் சோதனையில் தற்கொலை கடிதமும் சிக்கியது. அதில், தனது தற்கொலைக்கு காரணம் கார்த்திக், அருண் ஆகிய இருவர் தான். தன்னிடம் பெற்ற 25 லட்ச ரூபாய் பணத்தினை திருப்பிக் கொடுக்காமல், ஏமாற்றி மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.

அவர்களின் செல்போன் நம்பர் உட்பட அனைத்தையும் கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனிடையே, நைட்ரஜன் மற்றும் சிலிண்டர்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது? ஆன்லைன் மூலம் வாங்கினார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.