திமுக கவுன்சிலரின் மகளை கொடூரமாக கொலைச் செய்த சிறுவன்.. பரபரப்பு வாக்குமூலம்!!

518

தமிழகத்தில்..

தர்மபுரி பழைய ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். திமுக நிர்வாகியான இவர், நகராட்சி 8வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இவரது மகள் ஹர்சா(23) பி.பார்ம் படித்து விட்டு, ஓசூரில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடத்தூரான் கொட்டாய் அருகே, நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு நடத்திய விசாரணையில், கொல்லப்பட்டது ஹர்சா என்பது தெரிய வந்தது.

பின்னர் இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சடலத்தின் அருகே கிடந்த பேக் ஒன்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். ஓசூரில் தங்கியிருந்த ஹர்சா, தருமபுரி வனப்பகுதியில் சடலமாக கிடந்தது எப்படி எனவும் விசாரணையை முடுக்கி விட்டனர்.


இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் இளைஞர் ஒருவருடன் ஹர்சா பேசிக் கொண்டு இருந்ததாக போலீசாரிடம் சிலர் தெரிவித்தனர். மேலும், கொலையாளியை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த கொலையில் தொடர்புடையதாக 17 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த சிறுவன் ஹர்சாவை கொலைச் செய்ததை ஒப்புக் கொண்டான்.

மேலும் விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஹர்சாவுக்கும், சிறுவனுக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்துள்ளது. சிறுவன் தன்னைவிட வயது மூத்த ஹர்சாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். ஆனால், ஹர்சா வேறொரு இளைஞரை காதலித்து வந்ததாகவும், அவரை தான் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளதாகவும் சிறுவனிடம் கூறியுள்ளார்.

இதனை ஏற்க முடியாத சிறுவன், ஹர்சாவை ஓசூரில் இருந்து தருமபுரிக்கு ஹர்சாவை வரவழைத்துள்ளான். பின்னர் பைக்கில் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று ஹர்ஷாவைக் கொடூரமாக கொன்றதும் விசாரணையில் அம்பலமானது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.