மகளை கொன்று பக்கெட்டில் அடைத்த கொடூர தந்தை : மனதை உலுக்கிய சம்பவம்!!

1107

மதுரை…

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள சோலை அழகுபுரம் வ.உ.சி 3வது தெருவில் வசித்து வருபவர் காளிமுத்து – பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு 9 வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை இருந்தார். காளிமுத்து அதே பகுதியில் தையல் கடையில் டெயிலராக வேலை பார்த்து வருகிறார். காளிமுத்துவின் மனைவி பிரியதர்ஷினி கீழவாசல் பகுதியில் ஒரு பாத்திர கடையில் விற்பனை பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி இரவு இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அக்கம் பக்கத்தினர் ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டு பரணில் 9 வயது சிறுமி தன்ஷி கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒரு பக்கெட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதனை தொடர்ந்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.


விசாரணையில் கடந்த சில வருடமாக காளிமுத்துக்கும் அவரது மனைவி பிரியதர்ஷினிக்கும் இடையே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு நடந்ததாக தெரிய வந்தது. மேலும், காளிமுத்து மாயமானதால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பழங்காநத்தம் பகுதியில் தலைமறைவாக இருந்த காளிமுத்தை போலீசார் அதிரடியாக கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில், மனைவி பிரியதர்ஷினியுடன் காளிமுத்துவிற்கு ஏற்பட்டு வந்த தகராறு காரணமாக, மகளிடம் புலம்பியுள்ளதாகவும், அதற்கு சிறுமியோ நாம் இருவரும் இறந்து விடுவோம் என்றும் கூறியதாகவும்,

இதனை அடுத்து வீட்டின் அடுப்பங்கரையில் மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வாளியில் வைத்துவிட்டு பின்னர் வீட்டை விட்டு கிளம்பி ரயிலில் விழுந்து சாகலாம் என்று முடிவெடுத்து பயத்தின் காரணமாக மதுரையில் சுற்றி திறிந்தாக வாக்குமூலம் அளித்தார். அதனை தொடர்ந்து காளிமுத்தை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.