112 பனடோல் மாத்திரைகளை உட்கொண்ட கணவன் : மன வருத்தத்தில் தற்கொலை செய்துக்கொண்ட மனைவி!!

951

குடும்ப தகராறு காரணமாக கணவன் 112 பனடோல் மாத்திரைகளை சாப்பிட்டதால், மன வருத்தத்திற்கு உள்ளான மனைவி, தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பலாங்கொடை பிரதேசத்தில் இன்று நடந்துள்ளது.

குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து தகராறு காரணமாக கணவன் 112 பனடோல் மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மன வருதத்திற்கு உள்ளான மனைவி இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொடை கல்வல வீதி உடகந்தை என்ற முகவரியில் வசிக்கும் 31 வயதான பழனிவேல் கலைச்செல்வி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அவரது கணவரான 40 வயதான எல். லோகநாதன் என்பவர் 112 பனடோல் மாத்திரைகளை உட்கொண்டதால் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தம்பதிக்கு 10 மற்றும் 5 வயதான ஆண் பிள்ளைகள் இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். உயிரிழந்த பெண்ணின் பிரேதப் பரிசோதனைகள் இன்று பலாங்கொடை வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.