கர்நாடக மாநிலத்தில்..
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகா ஹலகார்த்தி கிராமத்தில் வசித்து வருபவர் விஜயகுமார். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 14 வயதில் பிரஜ்வல் என்ற மகன் இருக்கிறான்.
இவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். இவை ஜூலை 3ம் தேதி வீட்டு பின்புறம் சிறுநீர் கழிக்க சென்ற போது ஒரு பாம்பு அவனை கடித்துவிட்டது. இதற்காக அவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் 3 நாட்களுக்கு பிறகும் மீண்டும் அவனை பாம்பு கடித்து விட்டது. இது வரை இந்த சிறுவனை 6 முறை பாம்பு கடித்துள்ளது. இதற்காக அவர் 3 முறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமானான்.
மேலும் 3 முறை நாட்டு மருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டான். இதனால் பயந்துபோன விஜயகுமார்-உஷா தம்பதி மகனுடன் சித்தாப்பூருக்கு இடம் பெயர்ந்தனர்.
அங்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறினர். அதன் பின்னரும் 2 முறை பாம்பு சிறுவன் பிரஜ்வலை கடித்துவிட்டது. இதற்காக கலபுரகி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 27ம் தேதி 9வது முறையாக பிரஜ்வலை பாம்பு கடித்துவிட்டது. தற்போது அவன் கிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறான்.
அவனது உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை சிறுவனை தவிர பாம்பை அவரது பெற்றோர் யாரும் பார்த்ததில்லை என கூறப்படுகிறது.
எனவே விஜயகுமார்-உஷா தம்பதி, நாகதேவதைக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் 9 முறை பாம்பு கடித்தும் 9ம் வகுப்பு மாணவன் உயிர் பிழைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.