அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பேரிடியாக அமைந்த தீர்ப்பு: நீதித்துறையின் வெற்றி என கொண்டாடிய மக்கள்!

754

தனது நிதி ஆவணங்களை வெளியிடுவது தொடர்பான வழக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உச்சநீதிமன்றத்தில் தோல்வியை சந்தித்துள்ளார்.

டிரம்பின் நிதி தொடர்பான ஆவணங்களை பார்வையிட அமெரிக்க உச்சநீதிமன்றம் நியூயார்க் வழக்கறிஞருக்கு வியாழக்கிழமை உரிமை வழங்கியது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் பல்வேறு குழுக்களும் ஜனாதிபதி டிரம்பின் நிதி ஆவணங்களை வெளியிடுமாறு கோரியிருந்தன.

ஆனால் தற்போது அந்த ஆவணங்களை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் முன்பு சமர்ப்பிக்க தேவையில்லை என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மன்ஹாட்டன் வழக்கறிஞர் சைரஸ் வான்ஸ், இது நாட்டின் சட்ட முறைமைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்றார்.

யாரும், நாட்டின் ஜனாதிபதி கூட, சட்டத்திற்கு மேலே இல்லை எனவும் சைரஸ் வான்ஸ் தெரிவித்துள்ளார். வான்ஸ் 2011 ல் இருந்தே ஜனாதிபதியிடமிருந்து அவரது வரி தொடர்பான ஆவணங்களை கோரி வந்துள்ளார்.


ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹனிடமிருந்து ஆபாச நடிகை ஸ்டீபனி கிளிஃபோர்டுக்கு பணம் செலுத்தியதாக சந்தேகிக்கப்படும் விசாரணையின் ஒருபகுதியாக வான்ஸ் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

ஆனால் டிரம்ப் தனது கணக்காளர் மசார்ஸ் மற்றும் கடன் பெற்ற நிறுவனங்களான டாய்ச் வங்கி மற்றும் கேபிடல் ஒன் ஆகியவற்றால் தனது நிதி மற்றும் வரி ஆவணங்களை வெளியிடுவதைத் தடுக்க நீண்ட காலமாக முயற்சித்து வந்துள்ளார்.

இதனால் டிரம்ப் எதையோ மூடி மறைக்க முயற்சிப்பதாக விமர்சகர்கள் சந்தேகம் எழுப்பினர். தற்போது நீதிமன்றம் நிதி ஆவணங்களை சமர்ப்பிக்க தீர்ப்பளித்துள்ளது ஜனாதிபதி டிரம்பை கடும் கோபத்தில் தள்ளியுள்ளது.

கடந்த காலங்களில், நீதிமன்றம் ஜனாதிபதியிடம் அதிக மரியாதை காட்டியது. “ஆனால் தம்மிடம் அல்ல!” என இந்த விவகாரம் தொடர்பில் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். மேலும் “இவை அனைத்தும் அரசியல் துன்புறுத்தல்.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.