சோப் விளம்பரத்தில் நடித்துவிட்டுத் திரும்புகையில் நடிகைக்கு நேர்ந்த சோகம்!!

3922

பெங்காலி..

பெங்காலி டி.வி நடிகை சுசந்திரா தாஸ்குப்தா (29). நேற்று இரவு கொல்கத்தா புறநகர்ப் பகுதியில் சோப் விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காகச் சென்றிருந்தார். அவர் படப்பிடிப்பு முடிந்தவுடன் வீட்டுக்குத் திரும்புவதற்கு கார் இல்லாத காரணத்தால், ஆன்லைனில் பைக் டாக்ஸி புக் செய்தார்.

அவர் சொதேபூரிலிருக்கும் தனது வீட்டுக்கு பைக் டாக்ஸியில் வந்துகொண்டிருந்தபோது, பாராநகர் என்ற இடத்தில் திடீரென பைக் முன்பு ஒரு சைக்கிள் வந்துவிட்டது. உடனே சைக்கிள்மீது மோதாமலிருக்க, பைக் டிரைவர் சட்டென பிரேக் பிடித்தார்.

இதில் பின்னால் அமர்ந்திருந்த தாஸ்குப்தா நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அதேநேரத்தில் எதிர்த் திசையிலிருந்து வந்த லாரி தாஸ்குப்தா மீது மோதியது. தாஸ்குப்தா ஹெல்மெட் அணிந்திருந்தார். ஆனால் லாரியின் எடை தாங்காமல் ஹெல்மெட் உடைந்துவிட்டது. தாஸ்குப்தா உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.


ஆனால் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பைக்கை ஓட்டிய நபரும், பிரேக் பிடித்த வேகத்தில் கீழே விழுந்து லேசான காயமடைந்தார்.

விபத்தைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் போலீஸார் வரும்வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர். தாஸ்குப்தாவின் மரணம் பெங்கால் டி.வி உலகை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

அவர் ஏராளமான டி.வி நிகழ்ச்சிகளில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். இது குறித்து தாஸ்குப்தாவின் கணவர் தெப்ஜோதி பேசுகையில், “என்னுடைய மனைவிக்கு நடிப்பின்மீது அதிக ஈடுபாடு உண்டு. அவருக்குச் சிறு வயதிலிருந்து, நடிகையாக வேண்டும் என்று கனவு இருந்தது. நடிப்புக்காக வேலையைக்கூட ராஜினாமா செய்திருந்தார்” என்று தெரிவித்தார்.