திருமண நாளில் பயங்கரம்! சுட்டுக் கொல்லப்பட்ட 18 விருந்தினர்கள்: மர்ம நபர்கள் வெறிச் செயல்!!

330

நைஜீரியாவில் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் இடையே வன்முறை அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டினால், திருமண நாள் ஒரு படுகொலை நாளாக மாறிவிட்டது.

நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 10.35 மணியளவில் நடந்த திருமண கொண்டாட்டத்தில் இருந்த விருந்தினர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்த நிலையில், 30 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், நைஜீரியாவின் Kaura மாவட்டத்தின் Kukum-Daji கிராமத்தில் உள்ள சமூக வீடுகளில் ஒன்றில் நடந்த திருமண விருந்தைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் திருமண கொண்டாட்டத்தில் இருந்த விருந்தினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.


திருமண விருந்தில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் 18 பேரைக் கொன்றனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர், அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்று மாவட்ட நிர்வாகத் தலைவர் பெகே கட்டுகா அயுபா கூறினார்.

பதினைந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

தாக்குதலுக்குப் பின்னால் யார் என்று உடனடியாகத் தெரியவில்லை. இருப்பினும் இப்பகுதியில் இஸ்லாமிய புலானி மேய்ப்பர்களுக்கும், இன கிறிஸ்தவ விவசாயிகளுக்கும் இடையிலான கொடிய வன்முறை நடந்து வருகிறது.

மேய்ச்சல் மற்றும் நீர் உரிமைகள் தொடர்பாக விவசாயிகளுக்கும், மேய்ப்பர்களுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த மோதலால் முக்கியமாக கிறிஸ்தவ தெற்கு கடுனா பகுதி சிதைந்துள்ளதாக கூறப்படுகிறது.