பிரபல இளம் நடிகை கார் விபத்தில் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

795

வைபவி..

சினிமா எனும் மாய உலகம் எல்லோருக்கும் எல்லாம் கதவைத் திறப்பதில்லை. கதவின் வாசலிலேயே வருடக் கணக்கில் காத்திருப்பவர்கள், வெறுங்கையுடனே தங்களது காலத்தை முடித்துக் கொள்கிறார்கள்.

கதவுக்கு அருகே வரை கையில் சாவியுடன் செல்பவர்கள் திறக்க தெரியாமல் திரும்பி விடுகிறார்கள். எங்கோ வேடிக்கைப் பார்த்து கொண்டு இந்த விளையாட்டில் இல்லாமல் இருப்பவன், உள்ளே நுழைந்து சிம்மாசனத்தில் அமர்கின்றான்.

பலரது வாழ்க்கை இப்படி இருக்க, வைபவிக்கு திறமை, அதிர்ஷ்டம் வாய்ப்பு என எல்லாமும் ஒரே நேரத்தில் சரியாய் அமைந்தது. அழகு தேவதையாக இந்தி சீரியல்கள் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை வைபவி உபாத்யாய்.

32 வயது கூட இன்னும் நிரம்பாத நிலையில், கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். பிரபல ஸ்டார் ஒன் சேனலில் ஒளிபரப்பான ‘சாராபாய் vs சாராபாய்’ தொடரில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர்.


இந்த சீரியலின் இரண்டாவது சீசனிலும் வைபவி தான் ஹிட்டு, ஹாட் எல்லாமே. இந்த சீரியல் விசிட்டிங் கார்டு மூலமாக பல சீரியல்களிலும், பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். போகும் இடங்களில் எல்லாம் நம்ம தமிழ் பட ஜெனிலியா மாதிரி வைபவியின் துறுதுறு நடவடிக்கைகள் ரசிகர்களிடையே பிரபலமானது.

இந்நிலையில், நேற்று தனது வருங்கால கணவருடன் இமாச்சல் பிரதேசத்துக்கு காரில் சுற்றுலா சென்றிருந்த போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, பெரும் பள்ளத்தாக்கு ஒன்றில் கார் விழுந்தது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நடிகை வைபவி பரிதாபமாக உயிரிழந்தார்.வைபவியின் வருங்கால கணவரின் நிலை குறித்து எந்த தகவலும் இன்னும் கிடைக்கவில்லை.

நடிகை வைபவியின் குடும்பத்தினர் அவரது உடலை மும்பைக்கு கொண்டு சென்று அங்கு இறுதிச் சடங்குகளை நடத்த இருக்கின்றனர். வைபவியின் மறைவுக்கு அவருடன் நடித்த சக நடிகர்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இளம் நடிகை சாலை விபத்தில் மரணம் அடைந்தது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.