ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய பொறியியல் மாணவர் எடுத்த விபரீத முடிவு.. தொடரும் சோகம்!!

388

இந்தியாவில்..

இந்தியாவில் ஆன்லைன் செயலிகள் மூலம் கடன் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இன்றையக்கால இளைஞர்கள் சாதாரண தேவைக்கெல்லாம் ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி சிக்கிக்கொள்கின்றனர்.

கடனே வாங்கக்கூடாது என இருந்த காலக்கட்டம்போய் இப்போது, சிறு தேவைக்கும் வேண்டாத மோகத்துக்கும் கூட கடனை வாங்குகின்றனர். அதன் பிறகு கடனை திருப்பி செலுத்த முடியாமல் படும்பாடு பெரும் கதை.

இதனிடையே, கடனை திருப்பி செலுத்தாதவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து அதை, அந்த நபர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சம்பந்தப்பட்ட செயலி நிறுவனம் அனுப்பி வருகின்றன. இதனால் மனவேதனையில் கடன் வாங்கியவர்கள் பலர் தற்கொலை செய்த சம்பவம் நடந்து வருகிறது.


குறிப்பாக சீனாவில் இருந்து இந்த கடன் செயலிகள் அதிகமாக உலா வருவதாக கூறப்படுகிறது. தற்போது தமிகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த வகையில் சிக்கி உயிரை இழந்துள்ளார்.

நாமக்கல் அருகேயுள்ள செல்லப்பா காலணி பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ்வரன் (22). பொறியியல் மாணவரான இவர், ஆன்லைன் செயலியில் 15,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால், அவர் கடன் திரும்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்நிறுவனம் லோகேஷ்வரனின் பெற்றோரை தொடர்புகொண்டு, மகன் கடன் வாங்கிய விவகாரத்தையும், அந்த கடன் தொகையை செலுத்துமாறும் கூறியுள்ளது.

இதனால் வேதனை அடைந்த மாணவர் லோகேஷ்வரன் தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.