எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு.. எங்களுக்கு ஒரே ஆசை தான்.. காதலர் தினத்தில் இணையும் திருநங்கை -திருநம்பி ஜோடி!!

548

திருநங்கை -திருநம்பி ஜோடி..

காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதியன்று கேரளத்தை சேர்ந்த திருநங்கை சியாமா பிரபாவும், திருநம்பி மனு கார்த்திகாவும் திருநங்கை, திருநம்பி என்னும் அடையாளத்துடனேயே திருமணம் செய்ய முயற்சி எடுத்து வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் 31 வயதான திருநம்பி மனுகார்த்திகா. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கேரள அரசின் சமூகநலத் துறையின் கீழ் இயங்கும் மூன்றாம் பாலினத்தவர் மேம்பாட்டுப் பிரிவில் திட்ட அதிகாரியாக பணியாற்றிவருபவர் 31 வயதான சியாமா பிரபா.


இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் காதலர் தினமான வரும் 14-ம் தேதி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் இவர்களின் கனவே தங்களின் அடையாளத்தோடு திருமணம் செய்து மூன்றாம் பாலினத்தவர்களின் திருமணப் பதிவிலும் புதியவரலாற்றை உருவாக்குவது ஆகும்.

தங்களின் இந்த எண்ணம் குறித்து திருநம்பி மனு கார்த்திகா கூறுகையில், ‘எங்களுக்குள் ஒரு ஆத்மார்த்தமான ஈர்ப்பு உண்டு. சியாமா மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர். அவருக்கு மற்றவர்களைப் புரிந்து கொள்ளும் தன்மையும் அதிகம்.

அதுதான் அவர் மீது எனக்குக் காதலை ஏற்படுத்தியது. சியாமா வீட்டில் முத்தப் பெண். அவள் திருநங்கையாக மாறியிருந்தாலும் தன் குடும்பத்தை அர்ப்பணிப்புடன் கவனித்துக் கொண்டாள். எந்தக் கடமையில் இருந்தும் சியாமா பின்வாங்கவில்லை.

நானும் எனது வீட்டில் மூத்தவன். சியாமாவின் குணநலன்களைப் பார்த்துவிட்டு 4 ஆண்டுகளுக்கு முன்பே என் காதலைச் சொல்லிவிட்டேன். ஆனால், சியாமா ஓராண்டுக்கு முன்புதான் என்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்.

பொதுவாக திருமணத்தை பதிவு செய்யும்போது ஆண், பெண் என்ற அடையாளத்துடன் பதிவு செய்வது வழக்கம். ஆனால், நாங்கள் எங்கள் திருமணத்தை இரு மூன்றாம் பாலினத்தவருக்கு இடையிலான திருமணம் என பதிவு செய்ய உள்ளோம். அப்படி நடந்தால் அது புதிய வரலாறு.

திருநங்கைகள் உரிமை சட்டம் 2014 மற்றும் திருநங்கைகள் உரிமைபாதுகாப்புச் சட்டம் 2019 ஆகியவை மூலம் இப்படிச் செய்வதற்கான உரிமையை வழங்குகிறது.

நாங்கள் நினைக்கும் இந்த செயலை செய்தால் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களை திருமண பந்தத்திலும் துணிச்சலுடன் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் சூழல் உருவாகும் என நம்புகிறேன்.’ என திருநம்பி மனு கார்த்திகா தெரிவித்துள்ளார்.