காதலை முறித்துக் கொண்டதால் மருத்துவ மாணவிக்கு நடந்த கொடூரம் : நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!!

5205

ஆந்திராவில்..

காதலை முறித்துக் கொண்டதால் மருத்துவ மாணவியை, காதலன் அறுவை சிகிச்சை செய்யும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு பிடிஎஸ் படிப்பு பயின்று வருபவர் தபஸ்வி. வயது 20. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சாப்ட்வேர் இன்ஜினியரான ஞானேஸ்வர் என்ற இளைஞருடன் சமூகவலைதளம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களாக காதலர்கள் தபஸ்வி – ஞானேஸ்வர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.


இது தொடர்பாக தனது காதலன் ஞானேஸ்வர் மீது தபஸ்வி விஜயவாடா போலீசில் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தபஸ்வியை விட்டு விலகும்படியும், அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்று ஞானேஸ்வருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் ஞானேஸ்வருடனான காதலை தபஸ்வி முறித்துக்கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஞானேஸ்வர் தபஸ்வியை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஞானேஸ்வர் தான் மறைத்து வைத்திருந்த, அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியை கொண்டு தபஸ்வியின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் தபஸ்வி சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கிருந்த மக்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட்டிக்கொண்டிருந்த தபஸ்வியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தபஸ்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலியை கழுத்தறுத்து கொன்ற சாப்ட்வேர் இன்ஜினியர் ஞானேஸ்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவரிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலை முறித்துக் கொண்டதால் காதலி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.