குழந்தையின் உயிரை பறித்த றம்புட்டான்! வைத்தியசாலையில் ஏற்பட்ட குழப்பம்!

800

மாத்தளை – கொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் உயிரிழந்துள்ளது.

குழந்தை சிகிச்சைக்காக தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் உரிய சிகிச்சை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என தெரிவித்து குழந்தையின் உறவினர்கள் வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் அதன் சொத்துக்களை தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சம்பவத்தில் ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் சொத்துக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை ஆரம்பமான குறித்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை வரையில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் மேற்கொள்ளப்படும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.