கை தவறி ஆற்றில் விழுந்த போன் : 10 மாசத்துக்கு பிறகு கிடைச்சும் சீராக இயங்கும் அதிசயம்!!

850

இங்கிலாந்து..

இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் 10 மாதங்களுக்கு முன்னர் தனது ஐபோனை கைதவறி ஆற்றில் போட்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது அந்த போன் கிடைத்திருப்பதாகவும், மேலும்,அது சீராக இயங்குவதாகவும் அவர் தெரிவித்திருப்பது பலரையும் வியப்படைய செய்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்தவர் ஒவைன் டேவிஸ். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு க்ளௌசெஸ்டர்ஷைர் பகுதியில் உள்ள Wye ஆற்றங்கரையில் நடைபெற்ற பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். அப்போது அவரது ஐபோன் கைதவறி ஆற்றுக்குள் விழுந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த டேவிஸ், என செய்வதென்று தெரியாமல் திகைத்திருக்கிறார். அதன்பிறகு தனது போன் மீண்டும் கிடைக்காது என நினைத்து சோகத்துடன் வீடு திரும்பியுள்ளார் டேவிஸ்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு போன்கால் வந்திருக்கிறது. டேவிஸ்க்கு போன் செய்த மிகுவல் பச்சேகோ என்பவர், “ஆற்றில் விழுந்த உங்களது போன் என்னிடம் பத்திரமாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார். பச்சேகா தனது குடும்பத்தினருடன் அந்த நதியில் படகுப் பயணம் செய்திருக்கிறார். அப்போதுதான் டேவிஸின் போனை அவர் கண்டுபிடித்துள்ளார்.


போனை உரியவரிடத்தில் ஒப்படைக்க நினைத்த பச்சேகா, போனை உலர்த்தியிருக்கிறார். இதனிடையே இந்த போன் குறித்து பேஸ்புக்கிலும் அவர் பதிவிட்டிருக்கிறார். போன் ஆன் ஆகாததால் கவலையடைந்த பச்சேகா தொடர்ந்து முயற்சித்திருக்கிறார். இதுபற்றி அவர் பேசுகையில்,” ஒருவேளை என்னுடைய போன் காணாமல் போனால் நான் மிகுந்த கவலையடைவேன். ஏனெனில் போனில் என்னுடைய குழந்தைகளின் புகைப்படங்கள் இருக்கின்றன.

ஆகவே அது எனக்கு மீண்டும் கிடைக்கவேண்டும் என நினைப்பேன். ஆகவே இந்த போனின் உரிமையாளருடைய முக்கியமான சில புகைப்படங்களும் போனில் இருந்திருக்கலாம் என தோன்றியது. ஆகவே எனது முயற்சியை கைவிடவில்லை” என்றார். இந்நிலையில், ஒருநாள் அந்த போனை சுத்தம் செய்து சார்ஜ் செய்திருக்கிறார் பச்சேகா. அப்போது, அந்த போன் ஆன் ஆகியுள்ளது. இதனால் துள்ளிக் குதித்த அவர் அதனையும் பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். அந்த போனின் திரையில் ஒரு தம்பதியின் புகைப்படம் இருந்திருக்கிறது.

அத்துடன் போன் ஆற்று நீரில் விழுந்த தினமான ஆகஸ்டு 13 திரையில் தோன்றியிருக்கிறது. இந்த போன் குறித்த பச்சேகாவின் பதிவு பேஸ்புக்கில் 4000 முறை ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. ஒருவழியாக டேவிஸை கண்டுபிடித்த பச்சேகா, அவரது போனை ஒப்படைத்திருக்கிறார். இதனால் டேவிஸ் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கிறார். 10 மாதங்களுக்கு முன்னர் ஆற்றில் விழுந்த போன், மீண்டும் வேலைசெய்யும் நிலையில் உரிமையாளருக்கு மீண்டும் கிடைத்த சம்பவம் சமூக வலை தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.