சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

748

16 வயதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றவாளியான நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

அநுராதபுரம் இலக்கம் 2 மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கலாநிதி சுமுது பிரேமச்சந்திர இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

குறித்த சிறுமியை அவ்வப்போது வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை குறித்த நபர் ஒப்புக்கொண்டதை அடுத்தே இந்த தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார்.

நான்கு குற்றச்சாட்டுக்களுக்கு தலா ஏழு ஆண்டுகளும் ஏனைய குற்றச்சாட்டுக்களுக்கு தலா இரண்டு ஆண்டுகள் என 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இதனை தவிர முறைப்பாட்டாளரான சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டை செலுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதி, அதனை செலுத்த தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் – நொச்சியாகம பஹலவெட்டியாவ பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான நபருக்கு இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.