பேச மறுத்த கல்லூரி மாணவிக்கு இளைஞனால் அரங்கேறிய வெறிச்செயல்!!

1039

சிவகங்கை..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மாத்தூர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரது இளைய மகள் சினேகா. காரைக்குடி அழகப்பா கலை கல்லூரியில் கணிதவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் இலுப்புக்குடி புது குடியிருப்பத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற சென்ட்ரிங் வேலை செய்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் கண்ணன் வீட்டார் சினேகாவை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

சினேகா வீட்டார் சினேகாவின் அக்காவுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் வீட்டில் உள்ளதால் அவருக்கு திருமணம் முடிந்த பின்பு தான் சினேகாவின் திருமணம் குறித்து பேச முடியும் என்று கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு கண்ணன் சினேகாவின் தாத்தாவை கீழே தள்ளிவிட்டுள்ளார்.


அதில் காயமடைந்ததால் சினேகாவின் தந்தை சாக்கோட்டை காவல் நிலையத்தில் கண்ணன் குடும்பத்தார் மீது அப்பொழுது புகார் கொடுத்துள்ளார். காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் சமாதானமாக சென்றுள்ளனர்.

அதன் பின்பு கல்லூரி மாணவி சினேகா கண்ணனிடம் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார். பலமுறை சினேகாவிடம் பேச கண்ணன் முயன்றும் முடியாததால் இன்று இரு சக்கர வாகனத்தில் மாத்தூர் ரேஷன் கடை அருகே சினேகா வந்தபோது அவரை வழிமறித்த கண்ணன் அவருடன் பேச முயன்றுள்ளார்.

அப்போது, இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சினேகா அங்கிருந்து கிளம்ப முயன்றபோது தான் மறைத்து வைத்திருந்த சென்ட்ரிங் கம்பியை கொண்டு சினேகாவின் தலையில் பலமாக தாக்கிவிட்டு கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

அந்த வழியாக வந்தவர்கள் சினேகா வீட்டிற்கு தகவல் தெரிவித்து சினேகா குடும்பத்தார் அங்கு வரும்போது சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்குடி டிஎஸ்பி வினோஜி மற்றும் சாக்கோட்டை காவல் துறையினர் சினேகாவின் உடலை கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துகல்லூரி மாணவி சினேகாவை கம்பியால் தாக்கிகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்டப் பகலில் கல்லூரி மாணவி கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டது கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.