மறைந்த தங்கையின் சிலையை நிறுவி ஊர்வலம் : சகோதரர்கள் செயலால் நெகிழ்ச்சியில் உறவினர்கள்!!

549

ஆந்திர மாநிலம்…..

ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர் சிவா, இவருக்கு ராஜா என்ற சகோதரரும், வரலட்சுமி மற்றும் மணி என்ற 29 வயதுடைய சகோதரிகளும் உள்ளனர். இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் ஆன நிலையில், மணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த மணிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் இந்தியாவில் சகோதரர்கள் தினமாக கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் அன்று தங்களது இறந்த சகோதரி மணியின் நினைவாக ஒரு சிலையை நிறுவ திட்டமிட்டுள்ளனர் மணியின் சகோதரி – சகோதரர்கள். அதன்படி இரண்டு சகோதரர்களும் அவர்களது மூத்த சகோதரி வரலட்சுமியும் சேர்ந்து மணியின் சிலையை சுமார் 1.5 லட்சம் செலவில் உருவாக்கினர்.

மேலும் இந்த சிலையை நேற்று காக்கிநாடா பகுதியில் ஊர்வலமாக எடுத்து சென்று விழிப்புணர்வும் நடத்தினர். தங்களது சகோதரிக்கு நடந்த நிலைமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது என்று அவரின் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதோடு அங்கு ஒவ்வொரு பெண்ணும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்ற வாசகம் அடங்கிய ஃப்ளெக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.


இது குறித்து சகோதரர்கள் கூறுகையில், “பெண்கள் வாகனம் ஓட்டும் போதும், பின்னால் அமர்ந்து கொண்டும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எங்கள் சகோதரிக்கு வந்த நிலைமை வேறு யாருக்கும் வர கூடாது என்று தான் நாங்கள் இது போன்று சிலைகளை பேரணியாக எடுத்து செல்கிறோம்.

இந்த ராக்கி நாளில் எங்களது சகோதரியை நாங்கள் ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம். என் சகோதரியின் வலியை வேறு எந்த சகோதரியும் அனுபவிக்கக் கூடாது” என்றனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவர்களது பாசப்பிணைப்பு பலர் மத்தியிலும் கண்கலங்க செய்துள்ளது.