மாமனாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!!

1007

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தனது மாமனாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டதால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட்தொடரில் விளையாட வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மருத்துவ பாதுகாப்புடன் அரங்கேறும் இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகளின் வீரர்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா பரிசோதனைகளுக்கு பிறகே களம் காண அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது இரு அணியினரும் இறுதி கட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே, வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளர் பில் சிமோன்சின் மாமனார் சமீபத்தில் இங்கிலாந்தில் மரணம் அடைந்தார். வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய மருத்துவ அதிகாரிகளின் ஒப்புதலுடன் இந்த இறுதிச் சடங்கில் பில் சிமோன்ஸ் கலந்து கொண்டார்.


அதன் பிறகு அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அத்துடன் அவருக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளன. இன்னும் ஒரு முறை சோதனை செய்து முடிவு வந்த பிறகு அவர் அணியினருடன் இணைந்து செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனரும், பார்படோஸ் கிரிக்கெட் சங்க தலைவருமான கோன்டே ரிலே, பில் சிமோன்சை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

இது குறித்து வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களுக்கு அவர் எழுதி இருக்கும் கடிதத்தில், ‘பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் தனது உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்றது உண்மையெனில் அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

இது அணியில் உள்ளவர்களின் உயிரோடு விளையாடும் செயலாகும். இந்த பொறுப்பற்ற செயலை பொறுத்து கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளார்.