மொத்த கிராமமும் லிவிங் டு கெதர் தான்… தமிழ்நாட்டுல இப்படி ஒரு ஊரா? வியக்கவைக்கும் கலாச்சாரம்!!

992

தமிழ்நாட்டுல இப்படி ஒரு ஊரா?

தமிழகத்தில் உள்ள ஒரு மலைவாழ் கிராமத்தில் வாழும் மக்கள் பின்பற்றி வரும் வினோதமான வாழ்க்கைமுறை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குகைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வசித்துவந்த மனிதன் நாடோடிகளாக பயணப்பட தொடங்கிய காலத்திலிருந்தே வெவ்வேறு விதமான வாழ்க்கை முறையை மேற்கொண்டுள்ளான். பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காலநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அடிப்படையில் தங்களுக்கென விதிகளை வகுத்துக் கொண்டனர்.

இதுவே பல ஆண்டுகளாக பாரம்பரியம் எனும் பெயரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று நாம் பார்க்கும் அனைத்து கலாச்சார பழக்கவழக்கங்களும் இப்படி முன்னொரு காலத்தில் உருவாக்கப்பட்டவைதான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வாழும் மக்கள் உலகத்தின் பிற பகுதிகளில் வாழும் மக்கள் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களை பார்த்து பல நேரங்களில் ஆச்சரியப்படுவது உண்டு.


அவ்வளவு ஏன் தமிழகத்தில் ஒரு இடத்தில் நடைபெறும் சடங்குகள் போலவே அனைத்து இடங்களிலும் நடைபெறுவதில்லை. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஒரு மலைவாழ் கிராமத்தில் லிவிங் டுகெதர் என்னும் வாழ்க்கை முறை பல்லாண்டுகளாக இருந்து வருவது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

இந்த கிராமத்தில் திருமணம் முதல் பெண்களின் மாதவிடாய் காலம் மற்றும் இறப்பு என வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தின் போதும் இவர்கள் வித்தியாசமான பழக்க வழக்கங்களை கையாள்கின்றனர்.

இங்கே ஒரு பெண்ணை ஒருவருக்கு பிடித்துப் போகிறது என்றால் பெண்களுடைய வீட்டிற்குச் சென்று முறைப்படி பெண் கேட்பார்களாம். பெண் வீட்டு தரப்பிலும் ஓகே சொல்லிவிட்டால் அப்போதே பெண்ணை தங்களது வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவார்கள் மாப்பிள்ளை வீட்டார்.

இதுபற்றி கிராமவாசி ஒருவர் பேசுகையில் “பெண்ணை பிடித்துப் போய்விட்டால் அப்போதே எங்களுடைய வீட்டிற்கு அழைத்து வந்து விடுவோம். திருமணம் நடைபெற மாதக்கணக்கில் ஆனாலும் அந்தப் பெண் எங்களது வீட்டில் தான் இருப்பார்” என்றார்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் தங்களது வீட்டிற்குள் நுழைய கூடாது எனவும் இந்த கிராமத்தில் கட்டுப்பாடு இருக்கிறது. அந்த நாட்களில் பெண்கள் வீட்டில் இருந்து சற்று தொலைவில் தங்க வைக்கப்படுவார்கள்.

அவர்களுக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்லப்படும். குளிர், மழைக் காலம் என்றால் தனி குடிசை அமைத்து கொடுப்பார்களாம். அதேபோல இறந்தவர்களின் வீட்டிற்குச் சென்று விட்டு வருபவர்கள் காரியம் முடியும் வரையில் வீட்டிற்குள் நுழையக் கூடாதாம்.

பொதுவாக இறந்தவர் வீட்டிற்கு சென்றுவிட்டு குளித்த பின்னர் வீட்டிற்குள் நுழைவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கே எட்டாவது அல்லது 16-வது நாளில் நடக்கும் காரியத்தை முடித்ததற்கு பின்னால்தான் அவர் வீட்டிற்குள்ளேயே அனுமதிக்கப்படுவாராம்.

அது வரையில் வெளியில் தான். இதுபற்றி பேசிய அந்த நபர் “இது ஆங்கிலேயர் வருவதற்கு முன்பிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது. அதை நாங்களும் அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறோம்” என்றார்.

அதேபோல இந்த கிராமத்தைச் சேர்ந்த அல்லது இவர்களது இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவர் இறந்து போய் விட்டதாக கருதி அவருக்கு செய்யும் சடங்குகளையும் செய்வார்களாம் இந்த கிராமத்து மக்கள்.

தொழில்நுட்பத் துறையிலும் பல்வேறு ஆராய்ச்சியிலும் மகத்தான பாய்ச்சலை மனிதன் நிகழ்த்திக் கொண்டிருக்கும் வேளையில் இன்னும் நூற்றாண்டு மாறாத தங்களது பாரம்பரியத்தை தொடர்ந்து பின்பற்றி வரும் இந்த கிராம மக்கள் பலரையும் திகைக்க வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.