27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு பிறந்த குழந்தை: ஒரு சாதனையும் முறியடிப்பு!!

281

அமெரிக்காவில்………..

அமெரிக்காவில் 27 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்த டினா மற்றும் பென் கிப்சன் தம்பதியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இவர்கள், கரு தத்தெடுப்பு தொடர்பில் உள்ளூர் செய்தி ஊடகம் ஒன்றின் மூலம் தெரிந்து கொண்டுள்ளனர்.

இதனையடுத்து, இவர்கள் கரு தத்தெடுப்புக்காக அங்குள்ள தேசிய கரு தான மையத்தை நாடியுள்ளனர். அங்கு பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் மட்டும் இவ்வாறு பயன்படுத்தப்படாத 10 லட்சம் கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த தம்பதியர் 2017-ம் ஆண்டு அங்கு பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு கருவை தானம் பெற்று அதன் மூலம் எம்மா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்தக் குழந்தைக்கு தற்போது 3 வயது.


இந்த நிலையில் மறுபடியும் கரு தானம் பெற முடிவு செய்த இந்த தம்பதி 27 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட கருவை தெரிவு செய்துள்ளனர்.

இதன்மூலம் கடந்த அக்டோபர் மாதம் டினா கிப்சன் மற்றொரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்தக் குழந்தைக்கு அவரும், அவரது கணவரும் சேர்ந்து மோலி கிப்சன் என்று பெயர் சூட்டி உள்ளனர்.

அமெரிக்காவில் மிக நீண்டகாலம் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.