உலக அளவில் கவனத்தை ஈர்த்த முக்கிய சம்பவம்: பின்னணியில் ஐ.எஸ் தீவிரவாத குழுவா?

376

ஐ.எஸ். பயங்கரவாத குழு தயாரித்ததாக நம்பப்படும் 1 பில்லியன் யூரோ மதிப்புள்ள போதை மருந்துகளை இத்தாலிய பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனால் திரட்டப்படும் நிதியால் உலகெங்கிலும் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுக்க அந்த குழுவினர் திட்டமிட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சமீபத்தில் இத்தாலியில் 14 மெட்ரிக் டன் ஆம்ஃபிடாமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த போதைப்பொருள் சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் தயாரிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. தென்மேற்கு இத்தாலியில் உள்ள சலேநோ துறைமுகத்தில் 84 மில்லியன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு பில்லியன் யூரோவிற்கு மேல் மதிப்பு கொண்ட மாத்திரைகள் இவை. இந்த ஆண்டில் அதிக அளவு போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிகழ்வு இதுவாகும்.

இத்தாலி காவல்துறை இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. பொதுவாக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் ஸ்கேனர் கொண்டு போதைப் பொருட்கள் ஆராயப்படும். ஆனால் ஸ்கேனரின் சென்சார்கள் கண்டுபிடிக்க முடியாதவாறு தற்போது போதை பொருட்கள் பேக் செய்யப்படுகின்றன.


துறைமுகங்களில் கப்பல்களில் ஏற்றப்படும் சரக்கு பேரல்களில் இந்த போதைப் பொருட்கள் வழக்கமான சோதனையில்போது கண்டுபிடிக்கப்பட்டன. பொதுவாக தீவிரவாத குழுக்களால் கடத்தப்படும் போதை மாத்திரைகளில் வித்தியாசமான அடையாளம் ஒன்றை அச்சிடப்பட்டிருக்கும். இது மற்ற குழுக்களின் போதை மாத்திரைகள் இருந்து தீவிரவாத குழுக்களின் மாத்திரைகளை வித்தியாசப்படுத்திக் காட்டும்.

அமெரிக்க போதைப்பொருள் ஒழிப்புத் துறை இதுகுறித்து கூறுகையில், ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தங்கள் அமைப்புக்கு நிதி திரட்ட இவ்வாறு போதைப் பொருட்களை தயாரித்து கள்ள சந்தையில் விற்று வருவதாகத் தெரிவித்தனர். இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வழியாகச் செல்லும் கப்பல்கள் இந்த போதை பொருட்களை சிரியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன என அவர்கள் கூறினர்.

சிரியாவில் கொரோனா பாதிப்பு பிற ஐரோப்பிய நாடுகளின் ஒப்பிடுகையில் குறைவாக இருப்பதால் அங்கிருந்து சர்வதேச போதை கடத்தல் கும்பல் போதை பொருட்களை தயாரித்து அவற்றை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்த கொரோனா காலத்தில் கடந்த நான்குமுதல் ஐந்து மாதங்களில் சர்வதேச போதை கடத்தல் விகிதம் குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.