பத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய நிலச் சரிவு..! கடும் மழையால் பாதிப்புக்குள்ளான நேபாளம்..!

429

நேபாளத்தின் மியாக்டி பகுதியில், கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் காணாமல் போன 23 பேரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

“மராங்கில் இருந்து பத்து சடலங்கள் மீட்கப்பட்டன. ஒன்று தடகானியிலிருந்து மீட்கப்பட்டது. ரிக், கல்லேனி, ராம்சே, நம்ருக் மற்றும் காம்டி ஆகிய பகுதிகளிலிருந்து காணாமல் போன 11 பேரையும், மாலிகா கிராமப்புற நகராட்சியின் டியூலில் இருந்து எட்டு மற்றும் தக்காமில் இருந்து மூன்று சடலங்களையும் மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன” என்று காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

மியாக்டி மாவட்ட காவல்துறைத் தலைவர் டி.எஸ்.பி கிரண் குன்வார் கூறுகையில், பிராந்தியத்தில் வானிலை நிலைமை மேம்பட்டதைத் தொடர்ந்து மீட்பு ஹெலிகாப்டர் நிவாரணப் பொருட்களுடன் பாதிக்கப்பட்ட இடங்களை நோக்கி பறக்கத் தயாராகி வருவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.


மேலும் மாவட்டத்தில் நிலச்சரிவில் சுமார் 43 வீடுகள் புதைந்து போயுள்ளதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட 400’க்கும் மேற்பட்டோர் தக்கம், மராங் மற்றும் காந்திவாங்கில் உள்ள சமூக கட்டிடம் மற்றும் பள்ளி கட்டிடத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர்.