இரகசிய காதலியை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய முதியவர்.. நடந்த பின்னணி என்ன?

553

சென்னை..

சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் நாகன் (65). ஓய்வு பெற்ற BSNL ஊழியரான இவர், தனது மனைவி, மகளுடன் வசித்து வந்தார். இவருக்கும் செங்குன்றம் பேருந்து நிலையம் பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அற்புதம்மாள் (50) என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது. வெளியூர் செல்வதற்காக பேருந்து நிலையம் செல்லும் நாகன், அற்புதம்மாளை அடிக்கடி ரகசியமாகவும் சந்தித்து வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் இரகசிய காதலாக மாறியுள்ளது.

இவர்களது காதல் மோகத்தால் ஒருவரை விட்டு மற்றொருவர் பிரிய கூடாது என்று எண்ணம் தோன்றியுள்ளது. இதனால் அற்புதம்மாளை நாகன் தன்னுடன் தங்க வைக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி வீட்டுவேலை செய்வதற்காகவும், உடல்நலம் பாதித்த மனைவியை கவனித்துக் கொள்வதற்காகவும் வீட்டிற்கு அழைத்துசென்று தங்க வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி இரவு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குடிபோதையில் இருந்த நாகனுடன், அற்புதம்மாள் சண்டையிட்டுள்ளார்.

இந்த வாய்த்தகராறு சிறிது நேரத்திலேயே கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் கோபமடைந்த அற்புதம்மாள், நாகன் வாங்கி கொடுத்த செல்போனை தூக்கி எறிந்து வீட்டை விட்டு வெளியேற முற்பட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நாகன் அற்புதம்மாளை சரமாரியாக அடித்து, உதைத்து, கழுத்தை நெரித்துள்ளார். அதில் மயங்கி விழுந்த அற்புதம்மாள் உயிரிழந்துள்ளார்.


இதனால் செய்வதறியாது நின்ற நாகன், அற்புதம்மாளை வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். இதையடுத்து மறுநாள் காலையில், செங்குன்றம் காவல்துறையினரிடம் தனது வீட்டில் வேலை செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகாரளித்துள்ளார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அற்புதம்மாள் சடலத்தை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், அற்புதம்மாள் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து, நாகனை பிடித்து விசாரித்தபோது, அற்புதம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவர் மீது கொலை வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் புழல் சிறையில் அடைக்க உத்தரவிடவே, நாகனை சிறையில் அடைத்தனர்.