உயிரிழந்த நாத்தனாரை பார்க்க வந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

824

திருச்சி….

திருச்சி கல்லனை சாலையில் நேற்று முன்தினம் இரவு பனையபுரம் அருகில் கும்பகோணத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த லோடு ஆட்டோ மீது மணல் லாரி மோதியது.

இதில் கும்பகோணம் அண்ணாநகரை சேர்ந்த சத்யானந்தம் மனைவி சூர்யா (33), கணேசன் மனைவி லட்சுமி (53) ஆகியோர் உயிரிழந்தனர். சத்யானந்தம் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், உயிரிழந்த சூர்யா மற்றும் படுகாயமடைந்த சத்யானந்தத்தை பார்க்க, சூர்யாவின் தம்பி, திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே தொட்டியப்பட்டியை சேர்ந்த ரஞ்சித், அவரது மனைவி கிருத்திகா (21) ஆகியோர் நேற்றிரவு திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.


அப்போது சூர்யாவின் உடலை பார்த்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்த கிருத்திகா உயிரிழந்தார். இறக்கும்போது கிருத்திகா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார் குறிப்பிடத்தக்கது. கர்ப்பிணி பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தாரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 7 ஆம் தேதி இரவு திருச்சி மாவட்டம் கல்லணை அருகே பனையபுரம் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் டாடா ஏசி வாகனத்தின் மீது மணல் ஏற்றி வந்த லாரி மோதி விபத்தில் டாடா ஏசி வேனில் சென்ற 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 9 பேர் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.