கல்லூரி பேராசிரியருக்கு காதலால் ஏற்பட்ட கொடூரம்!!

334

அனிதா…

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை அங்காளபரமேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான அனிதா. இவர் காஞ்சிபுரம் ஏனத்தூரிலுள்ள தனியார் கலைக் கல்லூரியில்  தமிழ் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். திருமணமாகாத இவர் தனது அக்கா வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 9ஆம் தேதி வீட்டின் முதல் மாடியில் வசித்து வந்த அனிதா வீட்டின் தரை தளத்தில் இருந்த அவரது அக்கா குடும்பத்தாரை தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்லியதோடு அவரது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து அக்கா குடும்பத்தார் அனிதாவின் அறைக்கு சென்று பார்த்த போது, அவரது அறையின் கதவு உள் பக்கம் தாழிடப்பட்டு பூட்டப்பட்டிருந்தது. அனிதாவின் உறவினர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தப்போது அனிதா முகத்தில் ரத்த காயங்களுடன் படுக்கையில் மயங்கிய நிலையில் கிடந்தார்.


இதையடுத்து கதவை உடைத்து அனிதாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றபோது போது ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பூட்டிய வீட்டிற்குள் சடலமாக கிடந்ததால் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், இது கொலையா? தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

கூர்மையான ஆயுதம் மூலம் அனிதாவின் மார்பகத்தில் குத்தியுள்ளதால் அதிக ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதால், எலும்பில் அதற்கான தடயங்கள் இருப்பதாகவும் தன்னை தானே ஒருவர் இதுபோல குத்திக் கொள்ள இயலாது என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், அனிதாவின் செல்போன் தொடர்புகளை ஆய்வு செய்து அதில் பலமுறையும் சம்பவம் நடந்த நேரத்தில் கடைசியாகவும் பேசியிருந்த காஞ்சிபுரம் அருகே நாயக்கன்பேட்டை அரிசி ஆலையின் உரிமையாளரும் அரசு பள்ளியின் தற்காலிக உடற்கல்வி ஆசிரியருமான சுதாகர் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இதில் பேராசிரியை அனிதாவின் மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தது. உயிரிழந்த பேராசிரியை அனிதாவும், உடற்கல்வி ஆசிரியர் சுதாகரும் காஞ்சிபுரத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக பணியாற்றும் போது இருவருக்குள் காதல் மலர்ந்துள்ளது.

அனிதா தனியார் கலைக் கல்லூரியில் தமிழ் பேராசிரியையாக பணி மாறுதல் அடைந்த பின்னும், இவர்களுக்கு இடையேயான காதல் தொடர்ந்துள்ளது. அனிதா மட்டுமல்லாமல் மேலும் சில ஆசிரியைகளுடனும் சுதாகர் பழகி வந்ததாக கூறப்படுகின்றது. அனிதாவின் வீட்டில் அவரது உறவினர்கள் யாருமில்லாதப் போதெல்லாம் சுதாகரை அனிதா தொடர்புக்கொண்டு வீட்டிற்கு வரவழைத்து அவருடன் தனிமையை கழித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கும் சுதாகருக்கு சொந்தமாக அரிசி ஆலையும், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் வசதியும் இருந்தாலும், ஆசிரியைகளுடன் பழகி காதல் வலையில் வீழ்த்த வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு, சுதாகர் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிக்கு சேர்ந்ததாக கூறப்படுகின்றது.

வேறு சில ஆசிரியைகளிடம் சுதாகருக்கு இருந்த தொடர்பு குறித்து அறிந்த அனிதா, சுதாகரிடம் அடிக்கடி சண்டையிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நீண்ட நாளாக தொடர்பில் உள்ள தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவும் சுதாகரை அனிதா வற்புறுத்தி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த 9ஆம் தேதி அனிதா செல்போனில் அழைத்ததன் பேரில், அவர் தங்கி இருக்கும் அறைக்கு வெளியே வைத்து சந்தித்த சுதாகருக்கும் அனிதாவுக்கும் திருமணம் தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் அனிதாவின் தாடை மற்றும் மார்பகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அனிதா சுதாகரிடம் தப்பிக்க எண்ணி தன் அறையினுள் சென்று உள் பக்கமாக பூட்டிக் கொண்டு தனது உறவினர்களை செல்போனில் உதவிக்கு அழைத்துள்ளார். இதனை கண்டு சுதாரித்துக் கொண்ட சுதாகர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

அனிதா உயிர்பிழைக்க போராடிய போது சுதாகரின் மேல் சட்டைப் பையை பிடித்து இழுத்துள்ளார் அந்த சட்டைப் பை முக்கிய தடயமாக அங்கு சிக்கியுள்ளது. மேலும் அவர் பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்து கிடந்த நெல்மணிகளும் அங்கு வந்து சென்றது அரிசி ஆலை உரிமையாளரான ஆசிரியர் சுதாகர்தான் என்பதை காட்டிக் கொடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கோடிக்கணக்கில் வசதி இருந்தாலும் தவறான உடல் சார்ந்த தேடலால் கொலை வழக்கில் சிக்கி செங்கல்பட்டு சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் மன்மத ஆசிரியர் சுதாகர்.