கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு… காதலனுடன் சேர்ந்து தந்தையை கொன்ற மகள்!!

46

கன்னியாகுமரி பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இவரது இரண்டாவது மகள் தாயாருடனும், முதல் மகள் ஆர்த்தி (21) தந்தையுடனும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனது தந்தை இறந்துவிட்டதாக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் ஆர்த்தி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து சுரேஷ்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை போலீசார் பெற்றுள்ளனர். சுரேஷ்குமார் இயற்கைக்கு மாறான மரணம் என பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதன்பின், சந்தேகத்தின் பேரில் அவரது மகள் ஆர்த்தியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் ஆர்த்தியின் தந்தை தாக்குதலில் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சந்தேக மரணம் என, கொலை வழக்காகப் பதிவு செய்த பூதப்பாண்டி போலீஸார், ஆர்த்தியை கைது செய்து விசாரித்தனர். அதில், தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுரேஷ்பாபு (40) என்பவர் ஆர்த்தியுடன் திருமணத்திற்கு புறம்பாக தொடர்பு வைத்திருந்தார்.


இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இதனால் மகளின் செயல்களில் தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மகளை கண்டித்து வந்துள்ளார். மேலும் சுரேஷ் பாபுவுடன் பழகுவதை நிறுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆர்த்தி, காதலன் சுரேஷ் பாபுவுடன் சேர்ந்து தந்தையை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, சுரேஷ்குமாரின் பலவீனமான குடிப்பழக்கத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இருவரும், சுரேஷ்குமாரை அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றி சுயநினைவு இழந்த நிலையில் கொலை செய்தனர்.

இதையடுத்து அவர் இறந்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் கொடுத்து நாடகமாடினார். ஆனால் பிரேத பரிசோதனையில் அவர்களின் நாடகம் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து தந்தையை கொலை செய்த மகள் ஆர்த்தி மற்றும் காதலன் சுரேஷ் பாபு ஆகியோரை பூதப்பாண்டி போலீசார் கைது செய்தனர்.