காதல் திருமணம் செய்த தம்பதி… அண்ணன் உள்ளிட்ட இருவரால் அரங்கேறிய பயங்கரம்!!

395

கும்பகோணம்..

கும்பகோணம் அருகே சோழபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துலுக்க வேலி கிராமத்தைச் சேர்ந்த சரண்யா தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மோகன் என்பவரை காதலித்து வந்த நிலையில், ஐந்து நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் துலுக்க வேலி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரது நகையை சரண்யா வங்கியில் அடமானம் வைத்திருந்தார். அடமானம் வைத்த நகையை மீட்டு தரக்கோரி நகையின் உரிமையாளர் தொந்தரவு செய்யவே அதனை மீட்டு கொடுப்பதற்கு சரண்யா மற்றும் அவரது கணவர் மோகன் ஆகியோர் இன்று சோழபுரத்திற்கு வந்தனர்.

இந்நிலையில் சரண்யாவின் அண்ணன் சக்திவேல் இவ்விருவரையும் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்துள்ளார். சரண்யா மற்றும் அவரது கணவர் விருந்தை உண்டு விட்டு சொந்த ஊர் திரும்புவதற்கு வீட்டை விட்டு வெளியே வந்தனர்.


அப்போது சக்திவேல் மற்றும் அவரது மைத்துனர் ரஞ்சித் ஆகியோர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மோகனை வெட்டினர். இதனை பார்த்த சரண்யா தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். அவரையும் சக்திவேல் மற்றும் சக்திவேலின் மனைவியின் சகோதரர் ரஞ்சித்தும் வெட்டி விட்டு தப்பி ஓடினார்கள். சம்பவ இடத்திலேயே சரண்யாவும், மோகனும் உயிரிழந்தனர்.

இப்படுகொலை சம்பவத்திற்கு காரணமான சக்திவேல், மற்றும் ரஞ்சித் ஆகியோர் கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து திருவிடைமருதூர் காவல்நிலையத்தில் அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். சரண்யா தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.

இவரது காதல் கணவர் மோகன் (நாயுடு) பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். சரண்யாவை சக்திவேலின் மனைவியின் சகோதரர் ரஞ்சித்துக்கு திருமணம் செய்து வைக்கலாம் என சக்திவேல் நினைத்திருந்த நிலையில் சரண்யா, மோகனை காதல் திருமணம் செய்தது சக்திவேலுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக தான் இன்று இந்த இரட்டை கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சோழபுரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் சோழபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.