கோவையில் அடுத்தடுத்து 3 கல்லூரி மாணவர்கள் தற்கொலை.. அதிர்ச்சியில் பெற்றோர், போலீசார்!!

38

கோவையின் வெவ்வேறு கல்லூரிகளில் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தனுஷ் கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இதனிடையே தனுஷ் நேற்று சக மாணவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், கழிவறைக்குச் சென்ற தனுஷ் அங்கு தவறுதலாக வழுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

கீழே விழுந்த மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்படவே உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கல்லூரி நிர்வாகம் அழைத்துச் சென்றுள்ளது.

அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மாணவனின் மரணம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என்ற பெற்றோரின் குற்றச்சாட்டு தொடர்பாக குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போன்று சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் செவிலியர் கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பபிஷா என்ற மாணவி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.


நேற்று காலை கல்லூரி விடுதி கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மரணம் தொடர்பாக சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போன்று தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரா கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பவித்ரா சில பாடங்களில் மதிப்பெண் குறைவாக பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி சக தோழிகள் வகுப்புக்குச் சென்ற நிலையில், விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவையில் வெவ்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள், பெற்றோர் மற்றும் காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.