செல்போனால் வந்த அண்ணன் தம்பி சண்டை… கோவத்தில் அண்ணன் செய்த கொடூரம் : அதிரிச்சியில் உறைந்த உறவினர்கள்!!

433

சென்னை…

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராசு. 32 வயதான இவர் அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வரும் ராசுவிற்கு விக்கி என்ற இளைய சகோதரர் இருக்கிறார். கூலி வேலை செய்துவரும் விக்கியும் அவரது மூத்த சகோதரர் ராசுவின் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய விக்கி குடிபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. வீட்டிற்குள் நுழைந்த அவர் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த தனது அண்ணன் மகளிடம் செல்போனை கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்.

அவர் செல்போனை தராததால் செல்போனை பிடுங்கி சிறுமியை விக்கி தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து தனது தந்தையிடம் சென்று நடந்ததை கூறியுள்ளார் அந்த சிறுமி. இதனால் கடும் கோபமடைந்த ராசு, விக்கியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.


ஒருகட்டத்தில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராசு, விக்கியை சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. விக்கி மயக்கமடைந்து கீழே விழவே அச்சமடைந்த ராசு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்நிலையில் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் விக்கி மயக்கமடைந்து கிடப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவரை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று அனுமதித்திருக்கிறார்கள்.

அங்கே விக்கியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நொளம்பூர் பகுதி காவல்துறையினர் விக்கியின் உடலை கைப்பற்றி அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கிய காவல்துறை அதிகாரிகள் விக்கியை தாக்கிய ராசுவையும் கைது செய்திருக்கின்றனர். செல்போனால் ஏற்பட்ட தகராறு காரணமாக அண்ணனே தம்பியை கொலை செய்த சம்பவம் சென்னை முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.