தேனிலவில் செல்ஃபி… மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

266

புனே..

புனே தத்தாவாடி சுபாங்கி டிசம்பர் 8ம் தேதி சாஃப்ட்வேர் இன்ஜினீயர் விநாயக்கை திருமணம் செய்துகொண்டார். புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக புனே அருகில் உள்ள மலை நகரமான லோனவாலாவிற்கு சென்றனர். அங்கு மாதேரான் மற்றும் பன்வெல் இடையே 2,300 அடி உயரத்தில் பிரபல்காட் கோட்டை இருக்கிறது. இக்கோட்டைக்கு செல்ல மலையை உடைத்து படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் மலை உச்சியில் இருந்த பிரபல்காட் கோட்டையில் கால்வலிக்க நடந்து சென்றனர். மலை உச்சியில் நின்று சுபாங்கி தனது மொபைல் போனில் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு அங்கே சென்றார். கணவன் சொல்லியும் கேட்காமல் ஆசை மிகுதியால் மலை உச்சியில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் செல்ஃபி எடுக்கும்போது திடீரென கால் தவறி, 200 மீட்டர் பள்ளத்தில் விழுந்துவிட்டார்.

உடனே விநாயக் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாரும், மலையேற்றத்தில் ஈடுபடக்கூடிய சிலரும் கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கினர். அவர்கள் சுபாங்கியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.


ஆனால் சுபாங்கி கீழே விழுந்தபோது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் “இரண்டு பேரும் காலையில் நடந்து பிற்பகல் 2:30 மணிக்கு மலை உச்சிக்கு சென்றுள்ளனர். அங்கு சுபாங்கி செல்ஃபி எடுக்கும்போது கால் தவறி கீழே விழுந்தார். விபத்து மரணமாக பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என கூறியுள்ளது.