தொடர் கனமழை.. வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

327

தேனியில்..

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பம். இவரது கணவர் ரவிமுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு சந்தியா என்ற மகள் உள்ளார். கல்லூரியில் படித்து வந்தார்.

ஆனால், தேனியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் புஷ்பத்தின் வீடு சேதமடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறினர். இதையும் மீறி புஷ்பமும் அவரது மகள் சந்தியாவும் சேதமடைந்த வீட்டில் தங்கியுள்ளனர்.

அப்போது வீட்டின் சுவர்கள் திடீரென இடிந்து விழுந்தன. இதில் மாணவி சந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் புஷ்பம் பத்திரமாக உயிர் பிழைத்தார். அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த சந்தியாவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.