நடுவீதியில் துடிதுடித்து பலியான சகோதரிகள்!!

311

சென்னையில்..

சென்னை திருவொற்றியூர் ஒண்டிக்குப்பம் பகுதியில் வசித்து வரும் சகோதரிகள் பவானியும், சுபாவும். இருவருக்கு 37 மற்றும் 38 வயது. இவர்கள் இருவருக்கும் அதே பகுதியில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வந்த போதிலும் ஒன்றாக காசிமேட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தனர். நேற்று இரவு அவர்களின் தாயை பார்ப்பதற்காக சுபாவும், பவானியும் வீட்டில் இருந்து மெயின் ரோட்டிற்கு நடந்து சென்றனர்.

எண்ணூர் விரைவு சாலை அம்மன் கோயில் பெட்ரோல் பங்க்கிற்கு எதிரில் இருவரும் ஆட்டோ பிடிக்க சாலையைக் கடந்து செல்ல முயற்சித்தனர். அந்தவழியில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று இவர்கள் இருவர் மீதும் படுபயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த பவானி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். சுபா உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

அந்த பக்கமாக சென்ற வாகன ஓட்டிகள் உடனே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சுபாவை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சுபா உயிரிழந்ததாகத் தெரிகிறது. இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து அதிவேகமாக வந்த கல்லுரி மாணவர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்த முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் வண்ணாரப்பேட்டை பரத் மற்றும் ஏழுகிணறு பாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இதில் பரத் சத்தியபாமா கல்லூரியில் CSEAI 2 ம் ஆண்டும், பாலகிருஷ்ணன் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் 2 ம் ஆண்டும் படித்து வருகின்றனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.