சென்னையில்..
சென்னையை அடுத்த ஆவடியில் சின்னம்மன் கோவில் தெரு ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் மாநகராட்சி ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக அம்பத்தூரில் வேலை செய்து வருகிறார்.
அம்பத்தூர் கல்யாணபுரத்தைச் சேர்ந்த சாரம்மாள் என்ற பெண்ணுக்கு (25 வயது) ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இதனை மறைத்த சாரம்மாள், ஜான்சனை திருமணம் செய்துள்ளார்.
இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், சாரம்மாளுக்கு ஏற்கனவே திருமணமாகியது ஜான்சனுக்கு தெரியவந்துள்ளது.இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை அதிகமாகி உள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஜான்சன் சாரம்மாளை கழுத்தை அறுத்து கொலை செய்து சாக்கு பையில் கட்டி வைத்துவிட்டார்.
இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போலீசார் விசாரணை மேற்கொள்வதை அறிந்துக்கொண்ட ஜான்சன் காவல் நிலையத்திற்கு சென்று கொலை குறித்து தெரிவித்து,சரண் அடைந்து, ஏன் கொன்றார் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜான்சன் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் இருந்த சாரம்மாளின் உடலை மீட்டனர். பின்னர் சாரம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே ஜான்சன் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு பிரிவின் கீழ், வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சாரம்மாளுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் ஆந்திராவில் வைத்து திருமணம் நடந்திருக்கிறது.
முதல் கணவர் அம்மாவாசு உயிருடன் இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். தற்போது இரண்டு மகன்களும் ஆவடி நந்தவன மேட்டூரில் உள்ள அம்மா வீட்டில் இருக்கிறார்கள்.
இதை மறைத்து தன்னை இரண்டாவது திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து ஜான்சனிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.