மைதானத்திலேயே சுருண்டு விழுந்து கால்பந்து விளையாட்டு வீரர் பலியான சோகம்!!

205

ரபேல் டுவாமேனா..

தங்களுக்கு பிடிச்ச வேலையைச் செய்யுற வாழ்க்கை கிடைக்கிறது எல்லாம் வரம். நிறைய பேர், நடித்துக் கொண்டிருக்கும் போதே, பாடிக் கொண்டிருக்கும் போதே சாவு வரணும் என்று சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அப்படி, விளையாடிக் கொண்டிருக்கும் போதே, மைதானத்தில் சரிந்து விழுந்து பிரபல சர்வதேச கால்பந்து வீரர் ரபேல் டுவாமேனா காலமானார். கொடுமை… அவரது 28வது வயதில் இந்த மரணம் நேர்ந்திருக்கிறது.

கானா நாட்டை சேர்ந்தவர் ரபேல் டுவாமேனா, அல்பேனியாவின் டாப் பிரிவில் உள்ள இரண்டு அணிகளான KF எக்னாட்டியா மற்றும் பார்டிஜானி அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரபேல் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரின் திடீர் உயிரிழப்பு ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இச்சம்பவம் குறித்து கானா கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “இந்த கடினமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் ” எனத் தெரிவித்துள்ளது. முன்னதாக 2017ம் ஆண்டு ரபேல் டுவாமேனாவுக்கு இதய நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் 2021ல் ஆஸ்திரியாவில் நடந்த ஒரு ஆட்டத்தின் போது அவர் மைதானத்தில் இதேபோல் சரிந்து விழுந்து பின்னர் மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.