ரவுடியை என்கவுன்ட்டர் செய்ய போலீஸாருக்கு உதவியதால் ஆத்திரம் : மாடல் அழகிக்கு நடந்த கொடூரம்!!

223

மும்பையில்…

பிரபல மாடல் அழகியும், ரவுடியின் தோழியுமான திவ்யா பஹுஜா குருகிராமில் உள்ள ஓட்டலில் சுட்டுக் கொல்லப்பட்டார். மும்பையில் கடந்த 2016 பிப்ரவரி 7-ம் தேதி, ரவுடி சந்தீப் கடோலி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மும்பை ஓட்டலில் கடோலியை குறிவைத்துப் பிடிக்க, அவரது தோழியும் மாடல் அழகியுமான 27 வயதான திவ்யா பஹுஜா பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால், காவல் துறையினருடனான போலி என்கவுன்டரில் கடோலி கொல்லப்பட்டதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், சந்தீப் கடோலியை சுட்டுக் கொன்றதாக திவ்யா பஹுஜா, இவரது தாயார் மற்றும் ஐந்து பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கடந்த 7 ஆண்டுகளாக திவ்யா பஹுஜா சிறையில் இருந்தார்.


கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பை உயர் நீதிமன்றம் திவ்யா பஹுஜாவுக்கு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஐந்து பேர், திவ்யா பஹுஜாவை, குருகிராமில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு திடீரென அந்த கும்பல் அவரை தலையில் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது சடலத்தை ஓட்டல் அறையில் இருந்து இருவர் தூக்கிச் செல்வது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக ஹரியாணா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திவ்யா பஹுஜா, ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள பல்தேவ் நகரைச் சேர்ந்தவர். கடோலி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருடன் ஓட்டல் அறையில் அவர் இருந்துள்ளார். சந்தீப் கடோலி கொலை விவகாரத்தில், போலீஸார் மற்றும் ரவுடிக் கும்பல் ஆகிய தரப்புக்கும் மாடல் அழகி திவ்யா பஹுஜா பலிகடாவாகியுள்ளார்.