விருப்பமில்லாத காதல்.. தங்கையின் காதலன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சகோதரர்கள்!!

216

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், திருவள்ளுவர் தெருவில் வசித்து வருபவர் 24 வயது ஜீவா. இவர் கானா பாடல் பாடி, மேளம் அடிக்கும் பணி செய்து வந்தார். இவர் குண்டுமேடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர், வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இது குறித்து அந்த மாப்பிள்ளைக்கு ஜீவா, அந்த பெண்ணுடன் தான் சேர்ந்து இருக்கும் படத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இதனால் பெண்ணின் தந்தை மற்றும் அவரது மகன்கள் ஜீவாவை கண்டித்தனர். இதன் பிறகும் அந்த பெண்ணுடன் பெருங்களத்தூர் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் அருகே நின்று ஜீவா பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பெண்ணின் சகோதரர்கள் அந்த பெண்ணை திட்டி வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். இது குறித்து ஜீவா தனது நண்பர்களுடன் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார்.

அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர். மீண்டும் இரவு 11 மணிக்கு ஜீவா, நண்பர்களுடன் சேர்ந்து சென்று தகராறு செய்தார்.

பெண்ணின் சகோதரர்கள் அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்து ஜீவாவின் நண்பர்களை அடித்து விரட்டினர். ஜீவா மட்டும் அவர்களிடம்தனியாக சிக்கிக்கொண்டார்.


பெண்ணின் சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் ஜீவாவை சுடுகாட்டுக்கு தூக்கிச்சென்று அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லை போட்டும் கொலை செய்துள்ளனர்.

சுடுகாட்டில் ஜீவா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ஜீவாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பெண்ணின் சகோதரர்களான விஜய், அஜித், அவர்களது நண்பர் அரவிந்தன் மூவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கையின் காதலை சேர்த்து வைக்க விருப்பமில்லாத நிலையில் வீடு தேடி வந்து தகராறு செய்ததால் ஆத்திரத்தில் ஜீவாவை கொலை செய்து விட்டதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.