வீட்டை விட்டு கோபமாக வெளியே சென்ற இளம்பெண் : மூன்று நாள் கழித்து சடலமாக மீட்கப்பட்டசோகம்!!

358

ராணிப்பேட்டை…

ராணிப்பேட்டை மாவட்டம் மக்கட்டா அருகே உள்ள மரிஷியூர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி விமலேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இளைய மகள் பிரியங்கா (23) வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி காலை கோபமாக வீட்டில் இருந்து வெளியே வந்த பிரியங்கா வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர்.

அப்போது பிரியங்காவின் காலணிகள் ஊருக்கு அருகில் உள்ள விவசாயி கிணறு அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் சந்தேகமடைந்த பிரியங்காவின் பெற்றோர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.


நீண்ட நேரம் தேடியும் பிரியங்காவை காணாததால் தீயணைப்பு துறையினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பிரியங்காவின் உறவினர்களும் தேடுதல் வேட்டையை கைவிட்டனர்.

பிரியங்கா காணாமல் போன மூன்றாவது நாளான இன்று, விடியற்காலையில் பிரியங்காவின் தாத்தா கிணற்றைப் பார்த்துள்ளார். அப்போது பிரியங்காவின் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.