3 கருக்கலைப்புகள், 1600 ஊசிகள் – இவற்றிற்கு பின் நிகழ்ந்த அதிசய பிரசவம்!

765

புதிதாய் திருணம் செய்து கொண்ட இளம் ஜோடிகளுக்கு, திருமணம் ஆகி பல வருடங்கள் கடந்து போன தம்பதியர்களுக்கு என அனைத்து வித திருமணமான தம்பதிகளுக்கு இருக்கும் ஓரே ஒரு ஆசை! தனக்கென ஒரு குழந்தையை பெற்று வாழ்க்கையில் பயணிப்பது தான். குழந்தை என்பது ஆணும் பெண்ணும் உடலால் இணைந்து விட்டால், உடனே உருவாகி வந்து விடும் விஷயம் அல்ல.

குழந்தை என்பது கடவுள் கொடுக்கும் வரம்; ஆணையும் பெண்ணையும் படைக்கும் பொழுது அவர்களின் உடலை நல்ல நிலையில் வைத்து, பிற்காலத்தில் அவர்கள் ஒரு குழந்தையை பெற்று எடுக்க தகுதி உடையவர்களாக வாழ்வில் திகழும் வண்ணம் ஆண் மற்றும் பெண்ணை படைத்து இருப்பது தான், கடவுள் கொடுக்கும் வரம் எனப்படுவது ஆகும்.

கர்ப்பம் தரிக்க..!

முந்தைய காலத்தில் கர்ப்பம் தரித்து ஒரு குழந்தையை பெற்று எடுக்க அறியப்பட்ட ஒரே முறை கலவி தான். ஆனால், வளர்ந்து வரும் இந்த நாகரிக காலத்தில் குழந்தை பெற்று எடுக்க பல வழிகள் உள்ளன; கருவை கருப்பையில் சுமக்காமல், குழாயிலேயே உருவாக்கி கொடுக்கும் அளவுக்கு மருத்துவ துறை வளர்ந்து வருகிறது.

இந்த பதிப்பில் நாம் ஒரு தம்பதியரின் வாழ்வில் நிகழ்ந்த சோகம் கலந்த அதிசயம் பற்றி படித்து அறிய போகிறோம்.


யார் அந்த தம்பதி!

லண்டனில் வாழ்ந்து வந்த ஒரு தம்பதியருக்கு திருமணமாகி குழந்தை இல்லையே என்ற ஏக்கம் அதிகமாக இருந்தது. அவர்களுக்கு திருமணமான பின், ஒரு வருட காலத்தை அடையும் தருணத்தில் அவர்களின் வாழ்வில் சந்தோஷ வெளிச்சம் ஏற்பட்டது. அவர்களுக்கு என ஒரு குழந்தை உருவானது ஆனால், அது உருவான சில நாட்களிலேயே கலைந்து விட்டது.

கையில் கிடைத்தது வாய்க்கு எட்டவில்லையே என்ற சொலவடை படி, உருவாகிய சந்தோசம், முழுதாக உருப்பெறும் முன்னரே கலைந்து விட்டது.

முயற்சிகள் பல!

அதன் பின்னர், இந்த தம்பதியர் தங்களுக்கு என ஒரு குழந்தையை எப்படி ஆவது பெற்று எடுத்தே ஆக வேண்டும் என்ற ஆசையில், தங்களது மனதை திடப்படுத்திக் கொண்டு மேலும் முயற்சிகள் எடுக்க ஆரம்பித்தனர். முயற்சி எடுப்பது என்று முடிவு செய்த பின், எல்லா வித முறைகளையும் முயன்று பார்த்து விடலாம் என்று அந்த தம்பதியர் முடிவு செய்து கொண்டனர்.

முயற்சிகளும், கருக்கலைப்புகளும்!

ஆகையால், 7 முறைகள் தங்கள் உடல் நிலைக்கு பொருந்தும் மருத்துவ முறைகள் மற்றும் இயற்கை முறைகள் மூலம் கருத்தரிக்க முயற்சி மேற்கொண்டனர். தகுந்த மருத்துவ பரிசோதனை, சிகிச்சை, சரியான உடல் தகுதி இருந்தும் அவர்களுக்கு ஒரு குழந்தையை கருத்தரிப்பதற்கான வாய்ப்பை இறைவன் தராமல் விளையாட்டு காட்டினார். இந்த 7 முறை முயற்சி செய்ததில், தம்பதியருக்கு 3 முறைகள் கருத்தரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

ஆனால், உருவான கரு ஏதோ சில காரணங்களால், முழுமையான வளர்ச்சியை பெறாமல், கலைந்து போனது. ஒவ்வொரு முறை கரு கலைந்து போகும் பொழுதும், சொல்ல முடியாத வேதனை தம்பதியரின் மனதில் குடி கொண்டது.

வேதனையின் உச்சம்!

ஒவ்வொரு முறை கருக்கலைப்பு ஆகும் பொழுதும் அந்த பெண்மணி உடலாலும், மனதாலும் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை; மனைவியின் வேதனையை கண்டு அவளை எப்படி தேற்றுவது என்று அறியாமல் அந்த கணவர் தவித்த தவிப்பும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று! இவ்வளவு வேதனைகள் இருந்தாலும், தங்களது குழந்தையை தாங்களே பெற்று எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து வாடகைத்தாய் முறையை புறக்கணித்தனர்.

கடைசியாக IVF மருத்துவ முறையை முயற்சித்து பார்க்கலாம் என்று முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளில் இறங்க தொடங்கினர், தம்பதியர்!

IVF கருத்தரிப்பு முறை

இந்த முறையில் ஒரு கருவை உருவாக்க ஆணின் விந்து அணுவும், பெண்ணின் அண்ட அணுவும் அவரவர் உடலில் இருந்து ஊசிகள் மூலம் வெளியே எடுக்கப்பட்டு, ஒரு குழாயில் போடப்பட்டு கருத்தரிக்க தூண்டப்படும். குழாயில் முட்டைகள் கருவை உருவாக்கி, அந்த கரு வளரும் பருவத்தை எட்டும் பொழுது அதை எடுத்து பெண்ணின் கருவறைக்குள், பிறப்புறுப்பு வழியாக செலுத்தப்படும்.

தடைகள் தரும் வலிகள்!

இந்த கருத்தரிப்பு முறை மேற்கொள்ளப்படும் பொழுது, ஆண் மற்றும் பெண் உடலில் இருந்து வெளி கொண்டு வரப்பட்ட கரு முட்டைகள், சரியாக குழாயில் வளரவில்லை எனில், உடலை வெளியே எடுத்த பின் கருமுட்டைகள் இறந்து விட்டால் என பல காரணங்களால், தடைகள் ஏற்படலாம். தடை ஏற்படும் ஒவ்வொரு முறையும் பெரும் மன உளைச்சலை தருவதுடன், உடல் வேதனையையும் தரும்.

1600 ஊசிகள்!

ஏனெனில் ஊசிகள் மூலமாக தான் முட்டைகள் வெளியே எடுக்கப்படுகின்றன; குழாயில் சற்று வளர்ச்சி பெற்ற பின் மீண்டும் பெண்ணின் உடலில் செலுத்த ஊசிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையை லண்டன் தம்பதிகள் மேற்கொள்ளும் சமயத்தில், அந்த பெண்மணிக்கு 1616 ஊசிகள் போடப்பட்டதாக தகவல் தெரிவித்து உள்ளனர். இத்தனை ஊசிகளை தாங்கி குழந்தையை பெற்று எடுக்க வேண்டும் என்ற உறுதியை மனதில் கொண்ட அந்த பெண்மணியின் மன தைரியத்தை என்னவென்று கூறுவது!

கடைசியில் கிடைத்தது பரிசு!

3 கருக்கலைப்பு, 7 தடவைக்கும் மேற்பட்ட முயற்சிகள், 4 வருடத்திற்கும் மேலான தவம், 1616 ஊசிகள் உடலை துளைத்து எடுத்து கொடுத்த வலிகள் என அனைத்தையும் தாங்கி கொண்டு, வாழ்க்கையை கடந்து வந்த தம்பதியரின் மன வலிமையை, தைரியத்தை பார்த்த கடவுள், கடைசியாக அந்த பரிசை வழங்கி விட்டார்.

வரலாற்றிலேயே இத்தனை அதிக ஊசிகள் போடப்பட்டு பிறந்த குழந்தை என்று, இந்த குழந்தை தான் அறியப்படுகிறது. வலிகளை கடந்து வாழ்வில் ஜெயித்த இந்த தம்பதியர், தங்களுக்கு பிறந்த குழந்தையுடன், தங்கள் வாழ்வின் புது வரவுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறோம்.!