சென்னை..
சென்னை கொடுங்கையூர் தண்டையார்பேட்டை வினோபா நகரை சேர்ந்தவர் ரசூல் கான் (வயது 38). இவர் அதே பகுதியைச் சேர்ந்த குடும்ப நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் வசித்து வரும் 18 வயது இளம் பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், இதுகுறித்து தனது தாயாரிடம் கூறி உள்ளார். உடனே அவரும் ரசூல்கானை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால், ரசூல்கான் தொடர்ந்து அப்பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததுடன், தன்னை திருமணம் செய்யும்படி மிரட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் அப்பெண் இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் நூரி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ரசூல்கான் மீது எம்.கே.பி நகர், கொடுங்கையூர், மணலி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அவருக்கு ஏற்கனவே 3 முறை திருமணமாகி, மனைவிகள் அவரை விட்டு பிரிந்து சென்றதும் தெரியவந்தது.
இதனிடையே அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று கொடுங்கையூர் மூலக்கடை சந்திப்பு அருகே ரசூல்கான் மற்றும் அவரது நண்பரான செங்குன்றத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 23) என்பவருடன் செல்வது தெரிந்தது. அப்போது காரை சோதனை செய்தபோது அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது. இதனை அடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.