கன்னியாகுமரி…
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள அமந்தகரை பகுதியை சேர்ந்தவர் அபிஷா. முடார் பகுதியைச் சேர்ந்தவர் பெர்லின். இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால், குடும்பத்தை சமாதானம் செய்த அபிஷா, 2021ல் பெர்லினில் திருமணம் செய்து கொண்டார். அபிஷாவின் தந்தை, மகளின் திருமணத்தின் போது, மகளுக்கு ரூ.50 சவரன் நகை மற்றும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார்.
இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. ஓவியராக இருக்கும் பெர்லின் முழு நேர வேலை இல்லாமல் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, நண்பர்களுடன் ஊர் சுற்றியிருக்கிறார். மேலும், அபிஷாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் கணவரின் கொடுமையை தாங்க முடியாத அபிஷா, அவரை பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்தார்.
இந்நிலையில், அபிஷா கடந்த 3ம் தேதி மாலை பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக காரில் வந்த பெர்லின் அவரை வழிமறித்து தாக்கினார்.
மேலும், அவர் தனது மனைவியை காரில் இழுத்துச் சென்றார். இதனால் அபிஷா அலறி துடித்தார். இதை பார்த்த அப்பகுதியில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சில வாலிபர்கள் காரை துரத்திச் சென்றனர்.
உடனே மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு ஓடினார். இதில் அபிஷா கீழே விழுந்து சிறு காயம் அடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து அபிஷாவின் தந்தை திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.